கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளராகக் கடமையாற்றிய டொக்டர் எம்.பீ.அப்துல் வாஜித் நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு வைத்திய அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் கல்முனை பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளராக சுமார் இரண்டரை வருடங்கள் கடமையாற்றி கல்முனை பிரதேச மக்களுக்கு ஆற்றிய அளப்பரிய சேவைக்காக அண்மையில் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிரிவுத் தலைவர்கள் மற்றும் நலன்புரிச் சங்கம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த சேவைநலன் பாராட்டு விழா பணிமனையின் கேட்போர்கூடத்தில் அண்மையில் இடம்பெற்றது.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பணிமனையின் பிரிவுத் தலைவர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் பிராந்திய சுகாதார நிறுவனங்களின் தலைர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது டொக்டர் அப்துல் வாஜிதின் சேவைகள், அர்ப்பணிப்புக்கள் மற்றும் அவரது திறமைகள் பற்றி பணிப்பாளர் பிரிவுத் தலைவர்கள், சுகாதார நிறுவனத் தலைவர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப் பலரும் பாராட்டிப் பேசியதுடன் அவர்களினால் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் வாஜித் பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார். பல்துறை ஆளுமை கொண்ட டொக்டர் அப்துல் வாஜித் நிந்தவூர் வைத்தியசாலையின் முன்னேற்றம் அபிவிருத்திக்கு முன்னின்று உழைப்பார் என்பது அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.
ஏ. எல். றியாஸ் (பாலமுனை விசேட நிருபர்)