ஜனாதிபதி திரைப்பட விருது வழங்கும் விழா நாளை (14) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் கொழும்பு தாமரைத் தடாகம் அரங்கில் மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளது. பிரதமர் தினேஷ் குணவர்தன உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் இவ்விழாவில் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஜனாதிபதி திரைப்பட விருது விழா தொடரில் 20 ஆவது விழாவாக இந்த விழா நாளை நடைபெறவுள்ளது. 1979 ஆம் ஆண்டு முதல் இந்த விருது விழா ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை திரைப்படத்துறையின் தனித்துவமான அங்கீகாரம் பெற்றுள்ள ஜனாதிபதி திரைப்பட விருது விழா, போக்குவரத்து ஊடகத்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தனவின் வழிகாட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டு நாளைய தினம் நடைபெறவுள்ளது. இலங்கையில் திரைப்படக் கலை மற்றும் திரைப்பட தொழில்துறையை ஊக்குவிப்பதற்காக திரைப்படங்களின் பல்வேறு துறைகளை மதிப்பீடு செய்து, உலகை வெற்றி கொள்ளும் தேசிய திரைப்படங்களை உருவாக்குவதே இந்த விழாவின் நோக்கமாகும்.
இந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருது விழா “லொவ தினன லக் சினே வருன” என்ற தொனிப் பொருளில் நடைபெறுகிறது.
இத்திரைப்பட விருது விழாவில் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் திரையிடப்பட்ட 42 திரைப்படங்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக மூன்று ஸ்வர்ண சிங்க விருதுகள், 4 முன்னோடி விருதுகள் மற்றும் இரண்டு யுனிவர்சல் விருதுகள் இம்முறை விருது விழாவில் வழங்கப்படவுள்ளன.
லோரன்ஸ் செல்வநாயகம்