டிஜிட்டல் பொருளாதாரத்தின் ஊடாக 15 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டும் நோக்கில், டிஜிகொன் (DIGIECON) பொருளாதார யோசனையை நடைமுறைப்படுத்த தேவையான முன்மொழிவுகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்வைப்பாரென, இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவன பிரதி பிரதம டிஜிட்டல் பொருளாதார அதிகாரி சச்சிந்ர சமரரத்ன தெரிவித்தார். இலங்கையில் முதல் தடவையாக டிஜிட்டல் பொருளாதாரத்தை பரந்த அரச மற்றும் தனியார் கூட்டு முயற்சியின் கீழ் கட்டியெழுப்புமாறு, தொழில்நுட்ப அமைச்சுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் சகல தரப்பினருடனும் கலந்துரையாடல்களை நடத்தியதில், முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சச்சிந்ர சமரரத்ன குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் தயாரிக்கப்பட்ட “ஒன் ஓவன் உரை” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, சச்சிந்ர சமரரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த சச்சிந்ர சமரரத்ன,
முன்னர் ஈ- இலங்கை பற்றி பேசப்பட்டது. தற்பொழுது டிஜிட்டல் எனும் விடயம் முன்னுக்கு வந்துள்ளது. டிஜிட்டல் என்ற விடயம் ஸ்மார்ட் போனில் வந்துவிட்டது. கொடுக்கல் வாங்கல் தொடர்பான விடயங்கள் இன்று டிஜிட்டல் மயமாக்கப்பட்டுவிட்டன. இந்த பெரிய மாற்றம் இணையத்தின் மூலமே ஏற்பட்டது.
இந்த ஆண்டு, ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில், டிஜிகொன் (DIGIECON) பொருளாதார எண்ணக் கரு முன்வைக்கப்பட்டுள்ளது. இது 2030 க்கான வெற்றிகரமான திட்டமாகும். டிஜிட்டல் எப்போதும் மாறிக்கொண்டே இருக்கிறது. அரச மற்றும் தனியார் துறைகளை ஒன்றிணைத்து டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கான முதல் படி, தற்போது எடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய பொருளாதார முன்னேற்றத்திற்கு டிஜிட்டல் மயமாக்கலின் பங்களிப்பை 20% வரை அதிகரிக்க முடியும். டிஜிட்டல் பொருளாதாரக் கொள்கையை உருவாக்குவதில் இலங்கையில் பலர் பங்களித்துள்ளனர். இத்திட்டம் அரச மற்றும் தனியார் துறைகள் மற்றும் உலக வங்கியின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படுகிறது. தொழில்நுட்ப அமைச்சின் இணையத்தளத்தின் ஊடாக இது பற்றிய தெளிவைப் பெறலாம். டிஜிட்டல் பொருளாதாரம் புதிய தலைமுறைக்கு பெரும் பங்கை அளித்துள்ளது. இப்பொருளாதாரத்திலிருந்து யாரும் விலக முடியாது.