உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ரவுண்ட் ரொபின் சுற்றுப் போட்டிகள் நேற்றுடன் (12) நிறைவடைந்த நிலையில் அரையிறுதியில் இந்திய அணி நியூசிலாந்துடனும் தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியாவுடனும் மோதவுள்ளன.
உலகக் கிண்ண அரையிறுதிக்கு முன்னேறுவதற்கு குறுகிய வாய்ப்புடன் கடந்த சனிக்கிழமை (10) இங்கிலாந்து அணியை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி 93 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்ததை அடுத்து அரையிறுதி வாய்ப்பை இழந்ததோடு நியூசிலாந்து அணியின் அரையிறுதி வாய்ப்பு உறுதி செய்யப்பட்டது. அதேபோன்று ரவுண்ட் ரொபின் சுற்று முடிவில் அணிகள் புள்ளிப்பட்டியில் முதல் 8 இடங்களுக்குள் முன்னேறத் தவறிய இலங்கை அணி 2025ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண தொடருக்கான தகுதியை இழந்துள்ளது. இதன்படி புள்ளிப் பட்டியலில் முதல் 8 இடங்களுக்கு முன்னேறி இருக்கும் இந்தியா, தென்னாபிரிக்கா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணிகள் சம்பியன்ஸ் கிண்ண தொடருக்கு தகுதி பெற்றுள்ளன.
இதன்படி உலகக் கிண்ணத்தின் முதல் அரையிறுதிப் போட்டி எதிர்வரும் புதன்கிழமை (15) மும்பை, வாங்கடே அரங்கில் நடைபெறவுள்ளதாடு அதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. தொடர்ந்து வியாழக்கிழமை (16) கொல்கத்தா, ஈடன் காடன் மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன.