பல்வேறு ஊடக நிறுவனங்களையும் உள்ளடக்கிய ஊடகவியலாளர்கள் குழுவொன்று சமீபத்தில் சீகிரிய மற்றும் தம்புள்ள பிரதேசங்களுக்கு விஜயம் செய்தது.
வரையறுக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் கூட்டுறவுச்சங்கம் மத்திய கலாசார நிதியத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த இவ்விருநாள் கள விஜயத்தின் போது தம்புள்ளையிலுள்ள சுவரோவியங்களின் ஆராய்ச்சிகள் மற்றும் பேணிப்பாதுகாத்தலுக்குமான கலாநிதி ரோலண்ட் சில்வா நிலையத்திற்க்குச் சென்று அங்கு இடம்பெற்று வரும் செயற்பாடுகளைப் பார்வையிட்டதுடன் அங்குள்ள நூலகத்திற்கும் சென்று அங்குள்ள தொல்பொருள் சம்பந்தமான பல்வேறுபட்ட நூல்களையும் பார்வையிட்டனர்.
அத்துடன் தம்புள்ளையிலுள்ள தொல்பொருள் நூதனசாலைக்குச் சென்ற இக்குழுவினர் அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுவரோவியங்கள் மற்றும் பண்டைய வரலாறுகளுடன் தொடர்புபட்ட புகைப்படங்கள் மற்றும் ஆவணங்ளையும் பார்வையிட்டனர். இரண்டாம் நாள் நிகழ்வாக சீகிரிய மலைக்குன்றுக்குச் சென்ற இக்குழுவினர் அதிகாலையில் சீகிரிய மலைக்குன்றின் உச்சியிலிருந்து சூரியன் உதிப்பதைக் காண்பதற்கான சந்தர்ப்பத்தை சுற்றுலாப்பயணிகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் வேலைத்திட்டத்தினையும், அங்கு இடம்பெற்று வரும் அபிவிருத்திட்டங்களையும் பார்வையிட்டனர்.
இதேவேளை சீகிரிய நூதனசாலைக்குச் சென்ற இக்குழுவுக்கும் கலாசார மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்கவுக்குமிடையிலான சந்திப்பொன்றும் இடம்பெற்றது. சீகிரிய பிரதேசத்தின் அபிவிருத்தி, தொல்பொருள் திணைக்களத்தின் வேலைத்திட்டங்கள் மற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உல்லாசப்பயணிகளைக் கவரும் வகையில் அரசினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற செயற்பாடுகள் தொடர்பாகவும் புதிதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள தொல்பொருள் இடங்கள் தொடர்பாகவும் யுனெஸ்கோ நிறுவனத்திற்கு புதிதாக சிபார்சு செய்யப்படவுள்ள 10 மரபுரிமை விடயங்கள் தொடர்பாகவும் மத்திய கலாசார நிதியத்தின் செயற்பாடுகள் தொடர்பாகவும் அமைச்சர் இங்கு கருத்துத் தெரிவித்தார்.
அத்துடன் இக்குழுவினர் சீகிரியவிலுள்ள தொல்பொருள் நூதனசாலைக்கும் சென்று அங்கு ஜப்பான் ஜெய்கா நிறுவனத்தினால் நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி சீகிரியவையும் பார்வையிட்டனர்.
இதனைத் தொடர்ந்து புதிதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள பியன்கல மற்றும் அலிகல ஆகிய மரபுரிமை பிரதேசங்களையும் பார்வையிட்டனர்.
களவிஜயத்தின் போது மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் காமினி ரணசிங்க, வரையறுக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் கூட்டுறவுச்சங்கத்தின் தலைவர் ரோஹன சிரிவர்தன, மத்திய கலாசார நிதியத்தின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
அஸ்ஹர் ஆதம்…?
(கல்முனை குறூப் நிருபர்)