வடக்கு காசாவிலிருந்து பொதுமக்கள் வெளியேற அனுமதிக்கும் வகையில் ஒரு நாளைக்கு நான்கு மணிநேரம் போர்நிறுத்தம் செய்வதற்கு இஸ்ரேல் ஏற்றுக்கொண்டுள்ளதாக, அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மனிதாபிமான போர்நிறுத்தத்தை கடைப்பிடிப்பதென்ற இஸ்ரேலின் முடிவை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வரவேற்றுள்ளார். அத்துடன், பொதுமக்கள் வெளியேறுவதற்கு அனுமதிப்பதற்கான இரண்டு மனிதாபிமானப் பாதைகள் உருவாக்கப்படுமெனவும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மேலும் தெரிவித்ததாகவும், அச்செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன.
காசாவில் இஸ்ரேல் படையினர் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 10,818 பேர் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதாரத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 4,412 சிறுவர்களும் 2,198 பெண்களும் அடங்குவதுடன், தாக்குதல்களின் போது 2,650 பேர் காணாமல் போயுள்ளனர். 26,905 பேர் காயமடைந்துள்ளதாகவும், காசா சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், காசாவில் காணப்படும் 60% குடியிருப்புகள் இஸ்ரேலின் தாக்குதலில் தரைமட்டமாகி உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.