Friday, March 29, 2024
Home » கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைவது அவசியம்
கிரிக்கெட்டை பாதுகாக்க

கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைவது அவசியம்

by sachintha
November 10, 2023 6:27 am 0 comment

நாட்டின் கிரிக்கெட் விளையாட்டை பாதுகாப்பதற்கு ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமின்றி ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்கப்படுவது அவசியம் என, அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா பாராளுமன்றத்தில் தெரிவித்தார். புதிய சட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதை சபையில் சுட்டிக்காட்டிய அமைச்சர், சித்ரசிறி அறிக்கையை அடிப்படையாக வைத்து அந்த சட்டத்தை உருவாக்க முடியும் என்றும், அந்த அறிக்கை அரசியலுக்கு அப்பாற்பட்டது என்றும் அவர் சபையில் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை, பதவி விலக வேண்டுமென்ற ஒன்றிணைந்த யோசனை தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், இலங்கை கிரிக்கெட் சபையின் செயற்பாடுகள் தொடர்பில் நாட்டில் பாரிய மக்கள் எதிர்ப்பு உருவாகியுள்ளது. அந்த வகையில் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த யோசனையை நிறைவேற்றுவது நாட்டு மக்களின் கருத்துக்களுக்கு கௌரவமளிப்பதாகவே அமையும்.

இந்த மக்கள் கருத்தை பிரபலப்படுத்துவது தவிர,வேறு எந்த சட்டபூர்வ உரிமையும் எமக்கு கிடையாது.

அந்த வகையில் தேவையில்லாத பிரச்சினைகளுக்கு வழிவகுக்காமல், தற்போதுள்ள கிரிக்கெட் நிர்வாக சபையை தயவு செய்து பதவி விலகுமாறு நாம் கேட்டுக் கொள்கிறோம்.

அதேவேளை, இதுபோன்ற செயற்பாடுகள் இனியும் இடம்பெறாமல் உரிய நடவடிக்கை எடுப்பதும் அவசியமாகும்.

சித்ரசிறி அறிக்கைக்கிணங்க, அதனை அடிப்படையாகக் கொண்டு நாம் அரசியலுக்கு அப்பால் சட்டமொன்றை தயாரித்துள்ளோம்.

அதில் அமைச்சருக்கு கூட அதிகாரம் கிடையாது சிவில் சமூகத்திற்கே முழுமையான அதிகாரம் உள்ளது.

தற்போதைய ஜனாதிபதி குறுகிய அரசியலில் பயணிப்பவர் அல்ல. குறுகியகால அரசியல் இலாபத்திற்காகவன்றி நீண்ட கால எதிர்பார்ப்பை கொண்ட முறைமையொன்றை அரசாங்கம் வகுத்துள்ளது.

தற்போதுள்ள கிரிக்கெட் நிர்வாக சபை ஊழல் நிறைந்தது. அவர்களை வீட்டுக்கு அனுப்புவதற்கு சட்ட ரீதியான முறைமை தயாரிக்க வேண்டியது அவசியம்.

இருட்டில் கைகளை நுழைத்து இந்த பிரச்சினைக்கு பதில் தேட முடியாது.

அவசரமாக எதையாவது செய்யப்போய் அதன் மூலம் ‘சம்மி’ க்களையே பலப்படுத்த நேரும். அதனை சரியாக சிந்தித்து, அதற்கான சட்டத்தை பலமானதாக உருவாக்க, விளையாட்டுத் துறை சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT