நாட்டில் நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சனத்தொகையில் நூற்றுக்கு 14.6 வீதமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பொது மருத்துவ விஷேட நிபுணர் அருந்திகா சேனாரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,
உலகளாவிய ரீதியில் நோக்கும்போது உலக சனத் தொகையில் 500 மில்லியனுக்கும் அதிகமானோர் தற்போது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையைப் பொறுத்தவரை பிரதி ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை உலக சுகாதார அமைப்பின் அனுமதியுடன், இதன் விதிமுறைகளைப் பின்பற்றி கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
முழு நாட்டையும் உட்படுத்தி 18 வயதுக்கும் 69 வயதுக்கும் இடைப்பட்டவர்களிடையே மாதிரிகள் பெறப்பட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த மதிப்பீடுகளுக்கு அமைய நாட்டில் 14. 6 வீதமானோர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டில் மேற்கொண்ட கணிப்பீடுகளில், 7.4 வீதமாகவே இந்த நோயாளர்களின் எண்ணிக்கை காணப்பட்டது.
முறையற்ற உணவுமுறையை பின்பற்றல், மன உளைச்சல் ஆகியவையும் நீரிழிவு நோய் அதிகரிப்புக்குக் காரணமாகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)