நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கிண்ணத்தின் தனது கடைசி போட்டியிலும் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இதன்மூலம் உலகக் கிண்ணப் புள்ளிப் பட்டியலில் 9ஆவது இடத்திற்கு தள்ளப்பட்ட இலங்கை அணி 2025 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சம்பியன்ஸ் கிண்ணத்திற்கான தகுதியையும் பெரும்பாலும் இழந்துள்ளது. சம்பியன்ஸ் கிண்ண தொடருக்கு தகுதி பெற உலகக் கிண்ணத்தில் முதல் 8 இடங்களுக்குள் முன்னேற வேண்டி இருந்தது.
அதேபோன்று இந்தப் போட்டியில் இலகு வெற்றியீட்டியதன் மூலம் நியூசிலாந்து அணி 10 புள்ளிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தை தக்கவைத்துக் கொண்டதோடு நிகர ஓட்ட விகிதத்தையும் உயர்த்தி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பையும் அதிகரித்துள்ளது.
இதனால் தலா 8 புள்ளிகளுடன் தொடர்ந்தும் அரையிறுதி வாய்ப்பை எதிர்பார்த்திருக்கும் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த இரு அணிகளும் தனது கடைசி போட்டியில் வெற்றியீட்டினாலும் நியூசிலாந்தை பின்தள்ள அதிக இடைவெளியுடன் மிகப்பெரிய வெற்றி ஒன்றை பெற வேண்டி ஏற்பட்டுள்ளது.
உலகக் கிண்ண புள்ளிப் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் இருக்கும் இந்தியா, தென்னாபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன.
பெங்களுர், எம். சின்னசுவாமி அரங்கில் நேற்று (09) நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுக்க 46.6 ஓவர்களில் 171 ஓட்டங்களுக்கு சுருண்டது.
ஆரம்ப வீரர் குசல் பெரேரா 28 பந்துகளில் 51 ஓட்டங்களை விளாசியபோதும் மற்ற துடுப்பாட்ட வீரர்கள் சோபிக்கத் தவறினர். பின்வரிசையில் வந்த மஹீஷ் தீக்ஷன நின்றுபிடித்து ஆடியதால் இலங்கையால் கெளரவமான ஓட்டம் ஒன்றை பெற முடிந்தது.
இந்நிலையில் பதிலெடுத்தாட களமிறங்கிய நியூசிலாந்து அணி நெருக்கடி இன்றி ஓட்டங்களை குவித்தது. அந்த அணி 23.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 172 ஓட்டங்களை எட்டியது.
இலங்கை அணி இம்முறை உலகக் கிண்ணத்தில் ஆடிய ஒன்பது போட்டிகளில் நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் மாத்திரமே வெற்றியீட்டியதோடு மற்ற 7 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தது.