Friday, April 19, 2024
Home » அதானியின் கொழும்பு மேற்கு முனைய அபிவிருத்திக்கு அமெரிக்காவிடமிருந்து 553 மில். டொலர் நிதி

அதானியின் கொழும்பு மேற்கு முனைய அபிவிருத்திக்கு அமெரிக்காவிடமிருந்து 553 மில். டொலர் நிதி

- US International Development Finance Corporation அறிவிப்பு

by Rizwan Segu Mohideen
November 8, 2023 6:19 pm 0 comment
  • இது தனியார் துறை தலைமையிலான வளர்ச்சியை எளிதாக்குவதுடன், இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு உதவும் வகையில் முக்கியமான அந்நிய செலாவணியை வழங்கும்
  • அமெரிக்கா, இலங்கை, இந்தியா ஆகியன ஸ்மார்ட் மற்றும் பசுமை துறைமுகங்கள் போன்ற நிலைபேறான உட்கட்டமைப்பின் வளர்ச்சிக்கான ஒத்துழைப்பை மேம்படுத்தும்

இந்தியாவின் மிகப்பெரிய துறைமுக சேவை வழங்குனரான Adani Ports மற்றும் SEZ Ltd, இலங்கையின் முன்னணி நிறுவனமான John Keells Holdings (JKH) மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபை ஆகியவற்றின் கூட்டமைப்புடனான, Colombo West International Terminal Pvt. Ltd (CWIT) இற்கு 553 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியளிப்பதாக, US International Development Finance Corporation (DFC) அறிவித்துள்ளது.

அமெரிக்க அரசாங்கத்தின் அபிவிருத்தி நிதி நிறுவனமான DFC, வளர்ந்து வரும் நாடுகள் எதிர்கொள்ளும் மிக முக்கியமான சவால்களுக்கான தீர்வுகளுக்கு நிதியளிக்க, தனியார் துறையுடன் பங்குதாரர்களாக இருந்து வருகின்றது. இது சக்தி, சுகாதாரம், உட்கட்டமைப்பு, விவசாயம், சிறு வணிகம் மற்றும் நிதிச் சேவைகள் உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்கிறது.

அதானி குழுமத்திற்கு ஆதரவாக இருக்கும் அதானி திட்டத்திற்கு அமெரிக்க அரசாங்கம், அதன் முகவர் ஒன்றின் மூலம் நிதியளிப்பது இதுவே முதன் முறையாகும். கொழும்பு துறைமுகத்தில் உலகத்தரம் வாய்ந்த கொள்கலன் முனைய வசதியை உருவாக்குவதற்கும் முதலீடு செய்வதற்கும், அதானி குழுமத்தின் திறனில் அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையை இது காட்டுகிறது.

அதானி துறைமுகங்கள் மற்றும் விசேட பொருளாதார வலயத்தின் முழு நேர பணிப்பாளரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கரண் அதானி இது தொடர்பில் தெரிவிக்கையில், “அதானி திட்டத்திற்கு நிதியளிக்கும், அமெரிக்க அரசாங்கத்தின் அபிவிருத்தி நிதி நிறுவனமான U.S. International Development Finance Corporation (DFC) நிறுவனத்தை நாம் வரவேற்கிறோம். இது எமது திறன்கள் மற்றும் எமது நிர்வாகத்தின் தூரநோக்கத்தை சர்வதேச சமூகத்தால் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டதாக நாம் பார்க்கிறோம். உலகின் மிகப்பெரிய துறைமுக மேம்பாட்டாளரும், செயற்படுத்துனர்களில் ஒன்றுமான APSEZ, எமது உலகத்தரம் வாய்ந்த நிபுணத்துவத்தை மட்டுமல்லாது, உட்கட்டமைப்பு உருவாக்கத்தில் எமது ஆழ்ந்த அனுபவத்தையும் இந்த திட்டத்திற்கு வழங்குகிறது. கொழும்பு மேற்கு சர்வதேச முனையத் திட்டம் நிறைவடைந்தவுடன், ஆயிரக்கணக்கான நேரடி மற்றும் மறைமுக புதிய வேலை வாய்ப்புகள் மற்றும் இலங்கையின் வர்த்தக, வாணிப சூழல் தொகுதியை பாரியளவில் உயர்த்தும். இதன் மூலம், கொழும்பில் மட்டுமல்லாது, நாடு முழுவதிலும் உள்ள சமூக பொருளாதார நிலையில் அது மாற்றத்தை ஏற்படுத்தும்.

கொழும்பு துறைமுகம் இந்து சமுத்திரத்தில் மிகப்பெரிய மற்றும் சுறுசுறுப்பான பரிமாற்ற துறைமுகமாகும். இது 2021 முதல் அதன் 90% இற்கும் அதிக பயன்பாட்டுடன் இயங்கி வருகிறது. இது மேலும் அதன் கொள்ளளவை அதிகரிக்க வேண்டிய தேவையை சுட்டிக் குறிக்கிறது. அந்த வகையில் அபிவிருத்தி செய்யப்படும் புதிய முனையமானது, வங்காள விரிகுடாவில் வளர்ந்து வரும் பொருளாதாரங்களை பூர்த்தி செய்யும் என்பதோடு, முக்கிய கப்பல் வழித்தடங்களில் இலங்கையின் பிரதான நிலையை உறுதிப்படுத்துவதோடு, விரிவடையும் சந்தைகளுக்கான அதன் நெருக்கத்தை பயன்படுத்திக் கொள்ளும்.

DFC பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்கொட் நாதன் தெரிவிக்கையில், “DFC ஆனது தனியார் துறை முதலீடுகளை முன்னெடுத்துச் செல்கிறது. அது அபிவிருத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றும் அதே வேளையில், எமது கூட்டாளர்களின் மூலோபாய நிலைமையை வலுப்படுத்துகிறது. இந்த உட்கட்டமைப்பு முதலீட்டின் மூலம், கொழும்பு துறைமுகத்திலும் அதையே நாம் வழங்குகிறோம். உலகின் முக்கிய போக்குவரத்து மையங்களில் இலங்கை ஒன்றாகும். கடலில் பயணிக்கும் கொள்கலன் கப்பல்களில் பாதி அளவானவை இலங்கை கடல் வழியாகவே செல்கின்றன. மேற்கு கொள்கலன் முனையத்திற்கான 553 மில்லியன் டொலர் நிதியை, தனியார் துறை கடனாக வழங்கும் DFC யின் அர்ப்பணிப்பானது, இலங்கையின் கப்பல் திறனை விரிவுபடுத்தும் என்பதோடு, இலங்கைக்கு கடன் சுமையை ஏற்படுத்தாமல், இலங்கையின் வளர்ச்சியை உருவாக்கும். அதே நேரத்தில் பிராந்தியம் முழுவதும் எமது நட்பு நாடுகளின் நிலையை வலுப்படுத்தும்.” என்றார்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் இது தொடர்பில் தெரிவிக்கையில், “கொழும்புத் துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தின் நீண்டகால அபிவிருத்திக்காக DFC இன் 553 மில்லியன் டொலர் முதலீடானது, தனியார் துறை தலைமையிலான இலங்கையின் வளர்ச்சியை எளிதாக்கும் என்பதோடு, அதன் பொருளாதார மீட்சிக்கான முக்கியமான அந்நிய செலாவணி ஈட்டலை அதிகரிக்கும். இலங்கை அதன் பொருளாதார அடித்தளத்தை மீள அடைவதன் மூலம், சுதந்திரமான மற்றும் வளமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான எமது பகிரப்பட்ட நோக்கத்தை அது மேலும் மேம்படுத்தும்.” என்றார்.

PR-Nov-8-2023-DFC-CWIT-investment

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸின் தலைவரான கிரிஷான் பாலேந்திரா இது தொடர்பில் தெரிவிக்கையில், “DFC இன் முதலீடானது, மேற்கு முனையத் திட்டத்தை உருவாக்குவதற்கான அவசியத்தைத அங்கீகரிப்பதாக உள்ளதோடு, இலங்கையின் பொருளாதாரம் மீட்சியடைந்து வருவதால் முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்கு அது ஊக்கமளிப்பதாகவும் உள்ளது” என்றார்.

வளர்ந்து வரும் சந்தைகளில் மூலோபாய முதலீடுகள் மூலம் தனது உலகளாவிய தடத்தை அதானி குழுமம் விரிவுபடுத்துகிறது. போக்குவரத்து தளவாடங்கள் மற்றும் எரிசக்தி பயன்பாட்டு துறை வணிகங்களில் Adani Ports முன்னணியில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. உலகளாவிய தரத்திற்கு தரப்படுத்தப்பட்ட செயற்பாடுகள் மற்றும் முகாமைத்துவ நடைமுறைகளுடன் இந்தியாவில் பாரிய அளவிலான உட்கட்டமைப்பு மேம்பாட்டில் அது கவனம் செலுத்துகிறது. உயர்ந்த மற்றும் நிலைபேறான சொத்துகளை உருவாக்குவதற்கான தனது தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் மூலம், இந்தியா மற்றும் உலகிற்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதில் அதானி குழுமம் முக்கிய பங்கு வகிக்கிறது.

Colombo West International Terminal Pvt Ltd பற்றி
About Colombo West International Terminal Pvt Ltd ஆனது, இந்தியாவின் மிகப்பெரிய துறைமுக இயக்குனரான Adani Ports மற்றும் SEZ Ltd, இலங்கையின் முன்னணி நிறுவனமான John Keells Holdings மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு கூட்டமைப்பாகும். இந்தக் கூட்டமைப்பு கொழும்பு மேற்கு சர்வதேச முனையத்தை (CWIT) கட்டமைத்தல், இயக்குதல், பரிமாற்றுதல் (BOT) அடிப்படையிலான 35 வருட காலத்திற்கான அபிவிருத்தியை மேற்கொள்ளும். இந்த முனையத்தின் அபிவிருத்தியின் மூலம், இப்பிராந்தியத்தின் முதன்மை மையமாக கொழும்பு துறைமுகத்தின் நிலையை வலுப்படுத்தும் என்பதோடு, உலகின் சிறந்த கொள்கலன் முனையங்களில் அதன் தரவரிசையை 20 ஆவது இடத்திற்கு உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளாவிய கப்பல் வழி இணைப்பின் அடிப்படையில் உலகளாவிய ரீதியில் தற்போது 12ஆவது இடத்தில் உள்ள இத்துறைமுகத்தின் நிலையை மாற்றும். CWIT ஆரம்பிக்கப்பட்டதும், இலங்கையின் மிகப்பெரிய மற்றும் ஆழமான கொள்கலன் முனையமாக அமையும். 1,400 மீற்றர் நீளம் மற்றும் 20 மீற்றர் ஆழத்துடன், CWIT ஆனது 24,000 TEU திறன் கொண்ட அதி பாரிய கொள்கலன் கப்பல்களைக் கையாளும் வசதியை கொண்டிருக்கும். இந்த புதிய முனையத்தின் வருடாந்த சரக்கு கையாளும் திறனானது 3.2 மில்லியன் TEU களை கடக்க வாய்ப்புள்ளது.

Adani Ports & Special Economic Zone Limited பற்றி
Adani Ports and Special Economic Zone Limited (APSEZ) ஆனது, இந்தியாவின் முன்னணி வணிக நிறுவனங்களில் ஒன்றான பன்முகப்படுத்தப்பட்ட அதானி குழுமத்தின் கீழுள்ள ஒரு நிறுவனமாகும். இது ஒரு துறைமுக நிறுவனமாக இருந்து, ஒருங்கிணைந்த போக்குவரத்து பயன்பாடாக பரிணமித்துள்ளது. அது துறைமுக வாயிலில் இருந்து வாடிக்கையாளரின் வாயில் வரை ஒரு முடிவிலிருந்து மற்றொரு முடிவிற்கு தீர்வுகளை வழங்குகிறது. இந்தியாவின் மேற்கு கடற்கரையில் மூலோபாய ரீதியாக அமைந்துள்ள ஆறு துறைமுகங்கள் மற்றும் முனையங்கள் (குஜராத்தில் முந்த்ரா, தஹேஜ், டுனா, ஹசிரா, கோவாவில் மோர்முகவோ, மகாராஷ்டிராவில் திகி) மற்றும் கிழக்கு கடற்கரையில் ஐந்து துறைமுகங்கள் மற்றும் முனையங்களை (ஒடிசாவில் தாம்ரா, ஆந்திராவில் கங்காவரம், கிருஷ்ணாப்பட்டினம், தமிழ்நாட்டில் காட்டுப்பள்ளி, எண்ணூர்) கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய துறைமுக மேம்பாட்டாளரும் இயக்குனருமாகும். APSEZ ஆனது கடலோரப் பகுதிகள் மற்றும் உள்நாடு ஆகிய இரு பகுதிகளிலிருந்தும் பரந்த அளவிலான சரக்குகளைக் கையாளும் திறனைக் கொண்டுள்ளது. இது நாட்டின் துறைமுக அளவில் 24% கையாளுதல் ஆகும். அத்துடன் கேரளாவில் விழிஞ்சம் மற்றும் இலங்கையில் கொழும்பில் இரண்டு பரிமாற்ற துறைமுகங்களை அது உருவாக்கி வருகிறது. APSEZ இன் துறைமுக வசதிகள் மற்றும் பல்முறைமை தளவாட களஞ்சியங்கள், A தர கிடங்குகள் மற்றும் தொழில்துறை பொருளாதார வலயங்கள் உள்ளிட்ட ஒருங்கிணைந்த தளவாடத் திறன்களை உள்ளடக்கிய, உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் எதிர்பார்க்கப்படும் மறுசீரமைப்பு மூலம் இந்தியா பயனடைவதால், அதை ஒரு சாதகமான நிலையில் வைக்கிறது. அடுத்த தசாப்தத்தில் உலகின் மிகப்பெரிய துறைமுகங்கள் மற்றும் தளவாட தளமாக மாறுவதற்கான இலக்கை APSEZ கொண்டுள்ளது. விஞ்ஞான அடிப்படையிலான இலக்குகள் முன்முயற்சிக்காக (SBTi) பதிவுசெய்த முதலாவது இந்திய துறைமுகமாகவும், உலகின் 3ஆவது துறைமுகமாகவும் APSEZ விளங்குகின்றது. இது 2025 இற்குள் காபன் நடுநிலையாக்கலை மாற்றும் நோக்குடன் புவி வெப்பமடைதலை 1.5 பாகை செல்சியஸ் வெப்பநிலையில் கட்டுப்படுத்த காபன் வெளியீட்டை குறைக்கும் இலக்குகளை உறுதிசெய்கிறது.

மேலதி தகவலுக்கு: www.adaniports.com

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT