உத்தேச நுண்கடன் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை அடுத்த ஆண்டு ஜனவரி மாதமளவில் ஸ்தாபிக்கப்படவுள்ளது. இதனை தொடர்ந்து சகல நுண்கடன் நிதி நிறுவனங்களும் மத்திய வங்கியினால் நேரடியாக கண்காணிக்கப்படுமென, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
நாட்டில் நுண்கடன் நிதி நிறுவனங்களின் முறையற்ற செயற்பாடுகள் காரணமாக 30 இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். நேற்று முன்தினம் (06) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நுண்கடன் நிதி நிறுவனங்களை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகள் சர்வதேச மட்டத்தில் பேசப்படுகின்றன.
நுண்கடன்களால் சமூகத்தில் தற்கொலைகள், முரண்பாடுகள் உள்ளிட்ட பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. நுண்கடன் நிதி நிறுவனங்களின் முறையற்ற செயற்பாடுகளால் சுமார் 30 இலட்சம் பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டில் 11 ஆயிரம் நுண்கடன் நிதி நிறுவனங்கள் இயங்குகின்ற போதும், 05 நிறுவனங்களே பதிவு செய்யப்பட்டுள்ளன. பதிவு செய்யப்படாத நிதி நிறுவனங்களே முறையற்ற வகையில் செயற்படுகின்றன. நிதி நிறுவனங்களை பதிவு செய்வதை கட்டாயப்படுத்தும் சட்டமூலம் எதிர்வரும் மாதமளவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.