பேருவளை, பொல்கொடுவ ரோமன் கத்தோலிக்க கனிஷ்ட வித்தியாலயத்தின் வகுப்பறை கட்டடங்களை பழுதுபார்த்து புதிதாக புனரமைக்கும் பணிகளுக்காகவேண்டி இலங்கையிலுள்ள ‘சயீடா’ நிறுவனம் சுமார் 50 இலட்சம் ரூபா நிதியை வழங்கியுள்ளது.
நிறுவனத்தின் இலங்கைக்கான இணைப்பாளரும் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினருமான நௌஸர் பௌஸியிடம் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் விடுத்த வேண்டுகோளின் பேரிலேயே இந்நிதி வழங்கப்பட்டுள்ளது.
பாடசாலை அதிபர் தலைமையில் அண்மையில் நடைபெற்ற புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் சயீடா நிறுவன இணைப்பாளர் நௌஸர் பௌஸி பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் பேருவளை வலய கல்விப் பணிப்பாளர் உட்பட பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள், பேருவளை நகர சபை முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் தஹ்லான் மன்ஸூர், சமூக சேவையாளர் அல்ஹாஜ் இஷாக் மொஹமட் ஹஸன் உட்பட பாடசாலை மாணவர்கள், பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.