மட்டக்களப்பு மாவட்டம் ஓந்தச்சிமடம் கிராமத்தில் அமைந்துள்ள 450 மீற்றர் நீளம் கொண்ட காளிகோயில் வீதி கொங்றீட் வீதியாக புனரமைப்பு வேலைகள் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் 25 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் உத்தியோக பூர்வமாக இன்று (07) ஆரம்பித்து வைக்கப்பட்டன.
கிழக்கு மாகாணத்தில் மணல் வீதியற்ற மாகாணமாக மாற்றுவதற்குரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்குரிய ஆரம்ப பணிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 70 வருடகாலமாக அரசியல் பேசிய சமூகம் பயணிப்பதற்கு பாதைகள் இல்லாத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றது என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான பூபாலபிள்ளை பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.
வீதியின் அபிவிருத்தி வேலைகளை துவக்கிவைத்து விட்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், போக்குவரத்தினை இலகுபடுத்துகின்றபோதுதான் உள்நாட்டு உற்பத்திகளையும், கல்வியையும் மேம்படுத்த முடியும். எனினும், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மக்களின் போக்குவரத்தினை இலகுபடுத்த வேண்டும் என்பதற்காக கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சாந்திரகாந்தன் விவசாய, மீன்பிடி, உள்ளிட்ட பல வாழ்வாதார வீதிகளையும் செப்பனிடுவதற்கு முன்னுரிமை வழங்கி வருகின்றார் என தெரிவித்தார்.
இதன்போது வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் லிங்கேஸ்வரன், மற்றும் ஏனைய அரசியல் பிரமுகர்கள், கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
பெரியபோரதீவு தினகரன் நிருபர்