பாராளுமன்ற கட்டிடத்தில் கடந்த 20ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களான சுஜித் சஞ்சய, பெரேரா, மற்றும் ரோஹண பண்டார திசாநாயக்க ஆகிய மூவரும் பாராளுமன்றத்தின் கௌரவம் பாதிக்கும் விதத்தில் செயற்பட்டுள்ளதாக அது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது. மேற்படி விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச தலைமையிலான குழு நேற்று கூடியுள்ளதுடன், மேற்படி மூவருக்குமிடையில் இடம்பெற்றுள்ள சம்பவம் தொடர்பில் மேலும் விசாரணைகளை மேற்கொள்வதற்காக நாளை மறுதினம் 9ஆம் திகதி மீண்டும் கூடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளின் பின்னர் மேற்படி குழுவினால் தயாரிக்கப்படும் அறிக்கையை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளிக்கவுள்ளதாகவும் அந்த குழுவின் தலைவர் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச நேற்று ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற கட்டிடத்திற்குள் பகிரங்கமாக ஒருவரை ஒருவர் தூற்றியமை, தள்ளி விடுகின்றமை, மோதல்களை வீடியோ செய்தமை உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டு விசாரணைக் குழு தீவிர கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் பாராளுமன்றத்தின் கௌரவம், பாராளுமன்ற உறுப்பினர்களின் கௌரவம் பாதுகாக்கப்படும் வகையிலும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதே இந்த குழுவின் பிரதான நோக்கம் என்றும் பிரதி சபாநாயகர் இதன் போது தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்