போதையிலிருந்த பெண்கள் தாக்கியதில் பொலிஸ் கான் ஸ்டபிள் காயங்களுக்குள்ளானார். இவரை, அவசரமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்ததாக கறுவாக்காடு பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு கிரகெரி வீதியில் இடம்பெற்றது.
பொலிஸ் கான்ஸ்டபிளைத் தாக்கியதாக கூறப்படும் இரு பெண்களையும் கைதுசெய்த பொலிஸார், அவர்களது காரையும் கைப்பற்றினர். கொழும்பு 13 மற்றும் கொழும்பு 14 ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 30 மற்றும் 43 வயதுடைய இரண்டு பெண்களே சந்தேகத்தின்பேரில், கைதாகியுள்ளனர். கொழும்பு மாநகர போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் இந்த பொலிஸ் கான்ஸ்டபிள், மேலும் பல பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் இணைந்து மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தவராவார். இவ்வாறு பணிபுரிந்துவிட்டு,பொலிஸ் நிலையத்துக்குத் திரும்பிச் சென்றுகொண்டிருந்தபோதே, இப்பெண்கள் இவரைத் தாக்கியுள்ளனர்.