அமெரிக்கா தனது அணு சக்தி நீர் மூழ்கிக் கப்பல் ஒன்றையும் மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு அனுப்பியுள்ளது. இஸ்ரேல் மற்றும் காசா போர் வெடித்தது தொடக்கம் அமெரிக்கா பிராந்தியத்தில் படை பலத்தை பலப்படுத்தி வருகிறது.
ஏற்கனவே இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் துருப்புகளை இஸ்ரேலை ஒட்டி, பிராந்தியத்தில் அதிகரித்துள்ளது. எனினும் தமது படைகளை இஸ்ரேலுக்கு அனுப்பும் எண்ணம் இல்லை என்று அமெரிக்கா கூறியுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவின் 40,000க்கும் அதிகமான படைகள் நிலைகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அமெரிக்க உளவுப் பிரிவான சி.ஐ.ஏ. பணிப்பாளர் வில்லியம் பேர்ன்ஸ் நேற்று முன்தினம் இஸ்ரேல் பயணமானார். அங்கு அவர் இஸ்ரேலிய தலைவர்கள் மற்றும் உளவுப் பிரிவு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தொடர்ந்து பிராந்திய நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.