Friday, March 29, 2024
Home » “நீதிமான்களின் ஆன்மாக்கள் கடவுளின் கைகளில் உள்ளன”

“நீதிமான்களின் ஆன்மாக்கள் கடவுளின் கைகளில் உள்ளன”

நவம்பர் இறந்த ஆன்மாக்களை சிறப்பிக்கும் மாதம்

by damith
November 7, 2023 6:00 am 0 comment

த்தோலிக்க திருச்சபை இந்த மாதத்தை இறந்த ஆன்மாக்களை நினைவு கூறும் மாதமாக சிறப்பிக்கின்றது.

பரிசுத்த வேதாகமத்தின் சாலமோனின் நூல்கள் இவ்வாறு தெரிவிக்கின்றன.

“நீதிமான்களின் ஆன்மாக்கள் கடவுளின் கையில் உள்ளன. கடுந்தொல்லை எதுவும் அவர்களைத் தீண்டாது. அறிவிலிகளின் கண்களில் இறந்தவர்களைப் போல் அவர்கள் தோன்றினார்கள். நீதிமான்களின் பிரிவு பெரும் துன்பமாகக் கருதப்பட்டது. அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து சென்றது பேரழிவாகக் கருதப்பட்டது. அவர்களோ அமைதியாக இளைப்பாறுகிறார்கள். மனிதர் பார்வையில் அவர்கள் தண்டிக்கப்பட்டாலும், இறவாமையில் அவர்கள் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளார்கள். சிறிதளவு அவர்கள் கண்டித்துத் திருத்தப்பட்ட பின், பேரளவு கைம்மாறு பெறுவார்கள்.

கடவுள் அவர்களைச் சோதித்தறிந்த பின், அவர்களைத் தமக்குத் தகுதியுள்ளவர்கள் என்று கண்டார். பொன்னை உலையிலிட்டுப் புடமிடுவது போல் அவர் அவர்களைப் புடமிட்டார்; எரிபலி போல் அவர்களை ஏற்றுக்கொண்டார். கடவுள் அவர்களைச் சந்திக்க வரும்போது அவர்கள் ஒளிவீசுவார்கள்; அரிதாள் நடுவே தீப்பொறி போலப் பரந்து சுடர்விடுவார்கள்; நாடுகளுக்குத் தீர்ப்பு வழங்குவார்கள்; மக்கள் மீது ஆட்சி செலுத்துவார்கள். ஆண்டவரோ அவர்கள் மீது என்றென்றும் அரசாள்வார். அவரை நம்புவோர் உண்மையை அறிந்துகொள்வர்; அன்பில் நம்பிக்கை கொள்வோர் அவரோடு நிலைத்திருப்பர். அருளும் இரக்கமும் அவர் தேர்ந்துகொண்டோர் மீது இருக்கும்.

.நற்செய்தி வாசகம் இவ்வாறு தெரிவிக்கின்றது.”அக்காலத்தில் இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: “வானதூதர் அனைவரும் புடைசூழ மானிடமகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்றுகூட்டப்படுவர். ஓர் ஆயர் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப் பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப் பக்கத்திலும் நிறுத்துவது போல் அம்மக்களை அவர் வெவ்வேறாகப் பிரித்து நிறுத்துவார். பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப் பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, `என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப் பேறாகப் பெற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்; தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்; அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்; நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்; சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்’ என்பார். அதற்கு நேர்மையாளர்கள் `ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம், அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம்? எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக்கொண்டோம்? அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்? எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத் தேடி வந்தோம்?’ என்று கேட்பார்கள். அதற்கு அரசர், `மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்’ எனப் பதிலளிப்பார். பின்பு இடப் பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, `சபிக்கப்பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை. நான் அன்னியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அளிக்கவில்லை. நோயுற்றிருந்தேன்,

சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக் கொள்ளவில்லை’ என்பார். அதற்கு அவர்கள், `ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அன்னியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம்?’ எனக் கேட்பார்கள். அப்பொழுது அவர், `மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்’ எனப் பதிலளிப்பார். இவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் நிலை வாழ்வு பெறவும் செல்வார்கள்.”

இந்த நற்செய்திதான் கிறிஸ்தவ நம்பிக்கையின் மையமாக இருக்கிறது. இயேசுவால் மட்டும்தான் கடவுளை நமக்கு காட்ட முடியும், இயேசு வழியாக மட்டும்தான் நாம் கடவுளை காணமுடியும் என்பதுதான் அந்த நம்பிக்கை. யோவான் நற்செய்தியாளர் இதனை வேறு விதமாக கூறுகிறார். ”என்னைக்காண்பது தந்தையைக்காண்பது ஆகும்” (யோவான் 14: 9).

இயேசுவின் வார்த்தைகள் நமக்கு சொல்கின்ற செய்தி இதுதான்: நாம் கடவுளைப்பார்க்க வேண்டுமென்றால், கடவுளின் மனநிலையை அறிய வேண்டுமென்றால், கடவுளின் இதயத்தைப்புரிந்து கொள்ள வேண்டுமென்றால், கடவுளின் இயல்பைத் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், இயேசுவோடு நெருங்கி வர வேண்டும்.

இயேசுவை உற்றுநோக்க வேண்டும். இயேசுவின் வார்த்தைகளில் நம்பிக்கை வைக்க வேண்டும். அப்போது கடவுளை நாம் முழுமையாக அறிந்து கொள்ள முடியும். அவருடைய அன்பில் நாம் நிலைத்திருக்க முடியும். திருச்சபை நம்மை ஒரு மிக முக்கியமான விடயத்தை சிந்திக்க அழைக்கிறது.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில், மீட்பை பற்றி பின்வருமாறு சொல்லப்பட்டுள்ளது. ”ஏனெனில், “இயேசு ஆண்டவர்” என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள்.” இவ்வாறு உள்ளூர நம்புவோர் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆவர்; வாயார அறிக்கையிடுவோர் மீட்புப் பெறுவர். (உரோ. 10:9-10)

இயேசு ஆண்டவர், கடவுள் அவரை உயிர்த்தெழச் செய்தார் என்பதை உள்ளத்திலே நம்பி அதை வாயார அறிக்கையிடுவோர் மீட்பு பெறுவர்.

அப்படியானால் நாம் என்ன பாவம் செய்தாலும் விண்ணரசில் இடம் உண்டா? இதற்கு நற்செய்தி தெளிவான பதில் அளிக்கிறது. இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ வேண்டும். பணி வாழ்கையின் மூலம் இயேசுவின் சாட்சிகளாய் வாழ வேண்டும். இதுவே இயேசுவின் பாடுகளின் மூலம் பெற்ற மீட்பை காத்து கொள்ள சரியான வழி.

இவ்வுலகில் வாழும் போது எப்படி வாழ்ந்தால் இறை ஆட்சியில் நுழைய முடியும் எனபதை இயேசு தாமே தெளிவாகக் கூறுகிறார். ஒரே வாக்கியத்தில் சொல்ல வேண்டுமானால், “

இவ்வுலகில் வாழும் போது எப்படி வாழ்ந்தால் இறை ஆட்சியில் நுழைய முடியும் எனபதை இயேசு தாமே தெளிவாகக் கூறுகிறார். ஒரே வாக்கியத்தில் சொல்ல வேண்டுமானால், “தேவையில் இருக்கும் நம் சகோதர சகோதரிகளுக்கு நம்மாலான உதவிகளை செய்ய வேண்டும்”.

எனக்கே ஆயிரம் துன்பம் இருக்க நான் எப்படி மற்றவருக்கு உதவி செய்ய முடியும்? என்று நினைக்கிறோமா? நம்மை சுற்றிப்பார்த்தால் நம்மை விட அதிக தேவையில் பலர் இருப்பதை காணலாம். சிறிது நேரம் அவர்களிடம் ஆறுதலாக பேசலாம். இயேசுவின் அன்பை எடுத்து சொல்லலாம். அவர்களுக்காக செபிக்கலாம். உதாரணமாக மருத்துவமனைகளில் சென்று பார்த்தால், ஆறுதல் மொழிக்காக ஏங்கும் பலரை காணலாம். யாரவது எனக்காக செபிக்க மாட்டார்களா? என்று ஏங்கும் உள்ளங்கள் எத்தனை?

பண தேவையைவிட, அன்புக்கும் ஆறுதலுக்கும் ஏங்கும் உள்ளங்கள் எத்தனை நம்மைசுற்றி? நாமே ஆறுதலுக்காக ஏங்கிய நேரங்கள் எத்தனை? எண்ணிப்பார்ப்போம். இறைவனின் சமாதானத் தூதுவர்களாக நாம் மாறுவோம்.

நாம் இரக்கத்தின் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இயேசு மாட்சியுடன் வரும்போது அவர் நீதியின் அரசராய் செயல்படுவார். இறைவனிடம் திரும்பி வர, இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ நமக்கு அதுவரைதான் அவகாசம் உள்ளது.

அருட்பணி. ஜெ. தோமஸ் ரோஜர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT