இனங்களுக்கிடையே மத நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் நோக்கில் மாத்தளை அருள்மிகு முத்துமாரியம்மன் தேவஸ்தான கல்யாண மண்டபத்தில் நேற்று முன்தினம் (05) வாணி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்து கலாசார திணைக்களத்தின் மாத்தளை மாவட்ட காரியாலயத்தின் அனுசரணையுடன் மாத்தளை அருள்மிகு முத்துமாரியம்மன் தேவஸ்தான பரிபாலன சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பௌத்த, இந்து, இஸ்லாம், கத்தோலிக்க ஆகிய சர்வமத தலைவர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர். இதன் போது சகல மதங்களையும் பிரதிநிதிப்படுத்தும் அறநெறி 200 பாடசாலை மாணவர்களுக்கு பெறுமதியான பரிசில்கள் இங்கு வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மதங்களுக்கு இடையே நல்லிணக்கம் தொடர்பாக மாத்தளை மாவட்ட தகவல் திணைக்கள காரியாலயத்தின் அதிகாரி நிஷாந்தி நிரோசனி விசேட சொற்பொழிவாற்றினார்.
மாத்தளை மாவட்டத்திலுள்ள அறநெறி பாடசாலை ஆசிரியர்கள் உட்பட ஆலய அறங்காவலர் சபை தலைவர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
(மாத்தளை சுழற்சி நிருபர்)