Friday, April 26, 2024
Home » பலம் வாய்ந்த இராணுவக் கட்டமைப்பைக் கொண்ட இஸ்ரேலை நடுங்க வைக்கும் ஒரேயொரு விஷயம்!

பலம் வாய்ந்த இராணுவக் கட்டமைப்பைக் கொண்ட இஸ்ரேலை நடுங்க வைக்கும் ஒரேயொரு விஷயம்!

by damith
November 6, 2023 2:11 pm 0 comment

எத்தனையோ எதிர்ப்புகளுக்கும் மத்தியில் இஸ்ரேல் நிலைத்திருப்பதற்குக் காரணம், அது பலமான தேசம் என்பது அல்ல! எதிரிகளை பலவீனப்படுத்தி தன்னை வலிமையாகக் காட்டிக்கொண்டதுதான்.

வரலாற்றுக் கதைகள் படிப்பவர்களுக்கு இந்த விஷயத்தைக் கற்பனை செய்வது சுலபமாக இருக்கும். அந்தக் காலத்தில் மன்னர்களின் கோட்டைகள் எதிரிப்படைகளால் முற்றுகை செய்யப்படுவதைப் படித்திருக்கலாம். சுற்றிலும் எதிரிகள் சூழ்ந்திருக்க, எந்த நிமிடத்திலும் தாங்கள் தாக்குதலுக்கு ஆளாகலாம் என்ற அச்சம் இருக்க, அந்தக் கோட்டைக்குள் வாழும் மக்களின் மனநிலை என்னவாக இருக்கும்?

இஸ்ரேல் நாட்டில் வாழும் மக்களின் மனநிலை கடந்த 75 ஆண்டுகளாக இப்படித்தான் இருக்கிறது. பலஸ்தீன சுயாட்சிப் பகுதியிலிருந்து செயல்படும் ஹமாஸ் மற்றும் பலஸ்தீன இஸ்லாமிக் ஜிகாத் அமைப்புகளின் தாக்குதல்களைச் சமாளிக்க வேண்டும். கெரில்லா போர் நடத்தும் இவர்களை எதிர்கொள்ளும் உபாயங்கள் எதுவும் இஸ்ரேல் இராணுவத்திடம் இல்லை.

இஸ்ரேலுக்கு அண்டை நாடுகள் எதனுடனும் நல்லுறவு இல்லை. வடக்கில் லெபனானும் சிரியாவும் இருக்கின்றன. லெபனான் அரசும் எதிராக இருக்கிறது. அந்த நாட்டிலிருந்து செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பினரும் தாக்கிக்கொண்டே இருக்கிறார்கள். சிரியாவில் உள்நாட்டுப் போர் நடக்கிறது. அங்கிருக்கும் அரசு படைகளும், எதிர்த்துப் போரிடும் கலக அமைப்பினரும் ஒரு விஷயத்தில் மட்டும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். அது, ‘இஸ்ரேல் நமக்கு எதிரி’ என்று நினைத்து தாக்குவது.

கிழக்கில் ஜோர்டானும் ஈராக்கும் இருக்கின்றன. இரண்டுமே எதிரிகள்தான். சமீப ஆண்டுகளில் ஈராக்கில் ஸ்திரமற்ற சூழல் நிலவுவதால், அந்த வழியாகவும் அச்சுறுத்தல் இருக்கிறது. தெற்கில் இருக்கும் எகிப்து, சமீபகாலமாகத்தான் தாக்குதல்களைக் குறைத்திருக்கிறது. ஒரே ஆறுதலாக மேற்குப் பக்கம் கடல் இருக்கிறது. அந்தப் பக்கம் அச்சுறுத்தல் இல்லை. அதனால், இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ் உட்பட செறிவாக மக்கள் வாழும் நகரங்கள் இந்த மேற்குப் பகுதியில்தான் இருக்கின்றன.

பலமுறை இந்த அண்டை நாடுகளுடன் போர் செய்திருக்கிறது இஸ்ரேல். இந்தப் போர்களைத் தொடர்ந்து எகிப்துடன் 1979- ஆம் ஆண்டு அமைதி ஒப்பந்தம் போடப்பட்டது. ஜோர்டானுடன் 1994- இல் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால், அந்த எல்லைகளைத் தவிர்த்துவிட்டு மற்ற இடங்களில் கவனம் செலுத்துகிறது இஸ்ரேல் இராணுவம்.

இஸ்ரேல் வாழ்க்கைச்சூழலில் வாழ்வது அபாயம் நிறைந்தது. இஸ்ரேலின் பிரச்சினைகள் எந்த வசதியான நாட்டிற்கும் இல்லாதவை! வசதியான அடுக்குமாடி வீட்டில் நிம்மதியாகத் உறங்கிக் கொண்டிருக்கும்போது எங்கிருந்தோ ஏவுகணை தாக்கி அந்த வீடு நொருங்கி விழக்கூடும். அதில் உறங்கும் யாரும் உயிர் பிழைக்க வாய்ப்பில்லாமல் போகக்கூடும். காரில் போகும்போது, திடீரென வீதியில் ஒரு குண்டுவெடித்து, அந்தக் கார் உருக்குலைந்து போகக்கூடும். கூட்டமாக இருக்கும் சந்தைப் பகுதியில் யாரோ ஒரு தற்கொலைப்படை தீவிரவாதி வந்து, தன் உடலில் கட்டியிருக்கும் வெடிகுண்டை இயக்கக்கூடும். அதனால், அருகில் இருப்பவர்களும் உடல் சிதறி இறக்க நேரிடும். இதைவிட பல மடங்கு அபாயகரமான வாழ்க்கைச்சூழல் காஸாவிலும் மேற்குக்கரையிலும் வாழும் பலஸ்தீனர்களுக்கு இருக்கிறது.

புதிதாக இதையெல்லாம் பார்க்கும் எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருக்கும். ‘இப்படிப்பட்ட அபாயங்களுக்கு மத்தியில் ஒரு நிமிடம்கூட இருக்கக்கூடாது’ என்று தோன்றும். ஆனால், இஸ்ரேலியர்கள் குழந்தையாக இருக்கும் காலத்திலிருந்தே இதையெல்லாம் பார்த்துப் பழகி வளர்ந்ததால், அவர்களை இந்த எதுவும் பாதிப்பதில்லை. இதையெல்லாம் கடந்து வாழப் பழகிவிடுகிறார்கள்.

பலஸ்தீனத்தில் இருக்கும் ஒரு குழந்தைக்கும் இது பழகிப் போன காட்சி. தினம் தினம் இதைப் பார்த்து வளர்கிறது அந்தக் குழந்தை. இதேபோல இஸ்ரேலில் இருக்கும் பலருக்கும், வானத்தில் தீப்பிழம்பாக ஓர் ஏவுகணை வந்து பாய்வது சாதாரண காட்சி. தங்கள் கண்ணெதிரே ஒரு பேருந்து குண்டுவெடித்து உருக்குலைவது இயல்பான விஷயம். இன்று அப்படி ஒரு காட்சியைப் பார்த்தாலும், நாளை தயக்கமின்றி பேருந்தில் ஏறிப் பயணம் செய்வார்கள். தாக்குதல், வன்முறை, அச்சம் ஆகியவற்றுக்கு மத்தியில் வாழ்வதற்கு நிரந்தரமாக அந்த மக்கள் பழகியிருக்கிறார்கள்.

இஸ்ரேல் என்ற நாடு உருவெடுப்பதற்கு முன்பாகவே அந்த நாட்டின் இராணுவம் உருவாகிவிட்டது என்பது ஆச்சரியமான விஷயம். பிரிட்டிஷ் பிடிக்கு பலஸ்தீனம் வருவதற்கு முன்பே அங்கு அரேபியர்களுக்கும் யூதர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடக்க ஆரம்பித்தன. யூதர்களின் பாதுகாப்புக்காக Hashomer என்ற அமைப்பு உருவானது. இராணுவம் போலவே இதை யூத இனத்தைச் சேர்ந்த பெரும் பணக்காரர்களும் அரசியல் செல்வாக்குள்ளவர்களும் இணைந்து நடத்தினர். இதற்கென்று தனியாக ஓர் உளவுத்துறையும் இயங்கியது.

இதேபோல முதல் உலகப்போர் காலத்தில் யூதர்களைக் கொண்டு Zion Mule Corps, Jewish Legion ஆகிய துணை இராணுவ அமைப்புகளை உருவாக்கி தங்கள் இராணுவத்துடன் பயன்படுத்திக் கொண்டது பிரிட்டிஷ் அரசு. பிற்காலத்தில் அதில் இருந்தவர்களை இணைத்து Haganah என்ற இராணுவத்தை யூதர்கள் உருவாக்கினர். இஸ்ரேல் தேசம் உருவானதுமே, இந்த எல்லாவற்றிலும் இருந்தவர்களை இணைத்து இஸ்ரேல் இராணுவம் ஏற்படுத்தப்பட்டது.

உலகின் வலிமையான இராணுவங்கள் பட்டியலில் 18- ஆவது இடத்தில் இருக்கிறது இஸ்ரேல். மத்தியக் கிழக்கு ஆசியாவில் துருக்கி, எகிப்து, ஈரான் போன்ற நாடுகளின் இராணுவங்களில் இஸ்ரேலைவிட வீரர்கள் எண்ணிக்கை அதிகம். ஆனாலும், நவீன ஆயுதங்கள் மற்றும் போர்முறையால் இஸ்ரேல் தனித்து நிற்கிறது.

எப்போதும் முற்றுகையில் இருக்கும் ஒரு தேசத்துக்கு இராணுவ பலம் முக்கியம். இஸ்ரேலைப் பொறுத்தவரை அதற்குப் பஞ்சமே இல்லை. இஸ்ரேல் குடிமக்கள் எல்லோரும் 18 வயது நிரம்பியதும் கட்டாய இராணுவ சேவை செய்ய வேண்டும். ஆண்கள் 32 மாதங்களும், பெண்கள் 24 மாதங்களும் இராணுவப் பணியில் இணைந்திருக்க வேண்டும். ஆண்களைப் போலவே பெண் வீராங்கனைகளையும் போர்முனைக்கு அனுப்பும் சில நாடுகளில் இஸ்ரேலும் ஒன்று. இராணுவத்தில் சுமார் 88% பணிகளில் பெண்களும் பங்குபெறுகிறார்கள். கடந்த 1962 முதல் 2016 வரை இஸ்ரேல் இராணுவ வீராங்கனைகளில் 535 பேர் போர்முனையில் இறந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டாய இராணுவ சேவையை முடித்துவிட்டு வெளியேறியவர்களில் சிலரை ‘ரிசர்வ் ​ேசர்விஸ்’ என்ற பிரிவில் வைத்திருப்பார்கள். அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு மாதம் மட்டும் வந்து இராணுவப் பயிற்சி பெற்று, சிலவித இராணுவப் பணிகளைச் செய்துவிட்டுப் போவார்கள். எந்த நேரமும் போருக்குத் தயாராக இவர்கள் இருப்பார்கள்.

இஸ்ரேல் இராணுவத்தில் இப்போது 1,69,500 பேர் முழுநேரப் பணியில் இருக்கிறார்கள். இவர்களைத் தாண்டி 4,65,000 பேர் ரிசர்வ் பணியில் இருக்கிறார்கள். எந்த நேரத்திலும் இவர்களைக் களத்துக்கு அழைக்க முடியும் என்பதால்தான், ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்திய சில மணி நேரங்களில், காஸா எல்லையில் மூன்று இலட்சம் வீரர்களை இஸ்ரேலால் குவிக்க முடிந்தது. கவச வாகனங்கள், தாங்கிகள், ​ெராக்கெட் லோஞ்சர்கள் என்று உலகின் அதிநவீன இராணுவத் தளவாடங்களைக் குவித்து வைத்திருக்கிறது இஸ்ரேல் தரைப்படை.

கடற்படையும் ஐந்து நீர்மூழ்கிக் கப்பல்கள், விமானம் தாங்கிக் கப்பல் என்று பெரிதுதான். தேவைப்படும்போது அமெரிக்க கடற்படை உதவிக்கு வந்த நிற்கும். விமானப்படையில் F-15, F-16, F-35 என்று அதிநவீன விமானங்கள் 350 உள்ளன. இதுதவிர, ஹெரோன் எனப்படும் தாக்குதல் நடத்தும் டிரோன் படையும் அவர்களிடம் இருக்கிறது.

இஸ்ரேலின் இன்னொரு ஸ்பெஷல் அம்சம், Iron Dome எனப்படும் அதன் தற்காப்புக் கவசம். குறுகிய தூரம் இயங்கும் ஏவுகணைகளை கொண்டு ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகள் தாக்குதல் நடத்தினால், அவற்றை வானிலேயே வழிமறித்து அழிக்கும் தொழில்நுட்பம் இது. ஆனால், சமீப தாக்குதலில் குறுகிய காலத்துக்குள் அதிக ​ெராக்கெட்களை ஏவி இதைத் தடுமாற வைத்து வென்றது ஹமாஸ். இதேபோல நீண்ட தூரத்திலிருந்து ஏவப்படும் ஏவுகணைகளை வழிமறித்து அழிக்கும் David’s Sling, Arrow system போன்றவற்றையும் நிறுவியுள்ளது இஸ்ரேல். ஈரானோ, சிரியாவோ திடீரென தாக்கினாலும் பாதுகாக்க இந்த ஏற்பாடுகள்.

வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும், இஸ்ரேலிடம் அணு ஆயுதங்களும் இருக்கின்றன. சுமார் 100 முதல் 400 வரையிலான அணு ஆயுதங்கள் அதனிடம் இருக்கலாம் என்று சொல்கிறார்கள். நீர்முழ்கிக் கப்பலில் இருந்துகூட அணு ஆயுதங்களை ஏவுவதற்கு இஸ்ரேலால் முடியும்.

அமெரிக்காவுக்கு இணக்கமான நட்பு நாடுகள் பல இருந்தாலும், எந்த நேரத்தில் யார் எதிராகத் திரும்புவார்கள் என்று சொல்ல முடியாது. அதனால், இந்தப் பகுதியைக் கண்காணிக்கும் தனது விசுவாசியாக இஸ்ரேலை வைத்திருக்கிறது அமெரிக்கா.

Foreign Military Financing என்ற திட்டத்தில் பல நாடுகளுக்கு அமெரிக்கா இராணுவ உதவிகள் செய்கிறது. அந்தப் பட்டியலில் முதலிடத்தில் இஸ்ரேல் இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் இஸ்ரேலுக்கு சுமார் 4 இலட்சத்து 83 ஆயிரம் கோடி ரூபா அளவுக்கு இராணுவ உதவி செய்துள்ளது அமெரிக்கா.

இஸ்ரேலின் இராணுவத் தொழில்நுட்பமும் உலகப்புகழ் பெற்றது. துப்பாக்கிகள், மெஷின் கன்கள், ​ெராக்கெட்கள், இராணுவக் கவச வாகனங்கள், தாங்கிகள், சிறு போர் விமானங்கள், இராணுவ ட்ரோன்கள், இராணுவத் தகவல்தொடர்பு தொழில்நுட்பக் கருவிகள், ​ெராக்கெட் தாக்குதல் தடுப்புக் கவச அமைப்பு ஆகியவற்றை உற்பத்தி செய்யும் நிறைய தொழிற்சாலைகள் இஸ்ரேலில் உள்ளன. உலகின் பல நாடுகளுக்கு இவற்றை விற்று பெருமளவில் இஸ்ரேல் சம்பாதிக்கிறது.

இஸ்ரேலிடம் அதிகம் ஆயுதங்கள் வாங்குவது இந்தியாதான். என்னதான் அமெரிக்காவின் ஆசிய அடியாளாக இஸ்ரேல் இருந்தாலும், ரஷ்யா அந்த நாட்டிடம்தான் ட்ரோன்கள் வாங்குகிறது. இன்னொரு பக்கம் சீனாவுக்கு அதிகமாக ஆயுதங்கள் விற்கும் நாடுகள் பட்டியலிலும் இரண்டாவது இடத்தில் இஸ்ரேல் இருக்கிறது. ஐரோப்பிய நாடுகள் பலவும் இஸ்ரேலின் வாடிக்ைகயாளர்கள்.

‘இஸ்ரேலை சீண்டினால் அமெரிக்காவின் கோபத்தை சம்பாதிக்க நேரிடும்’ என்று பெரும்பாலான அரபு நாடுகள் அதனுடன் சமாதானமாகப் போய்விட்டன. அதனால், மரபுசார்ந்த இராணுவத் தாக்குதல் நடத்தும் போர்களை இனி செய்ய வேண்டியிருக்காது என்றே அந்த நாடு நம்புகிறது. அவர்களுக்குத் தலைவலியாக இருப்பது ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகள்தான்.

உலகின் மிகச் சிறந்த உளவு அமைப்பை வைத்திருக்கும் இஸ்ரேல், இவர்கள் விஷயத்தில்தான் தடுமாறுகிறது. இஸ்ரேலின் அதன் உளவு அமைப்புகளின் கரங்கள் உலகம் முழுக்க நீண்டிருக்கின்றன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT