பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இடையில் சந்திப்பொன்று நேற்று முன்தினம் (02) அலரி மாளிகையில் நடைபெற்றதுடன், அவர்கள் இருவரும் பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினர்.
இந்திய நிதி அமைச்சரின் விஜயத்தின் போது கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் பௌத்த உறவுகளை மேம்படுத்துவதற்காக 1.0747 பில்லியன் இந்திய ரூபா உதவியில், 824 மில்லியன் இந்திய ரூபாவை மத ஸ்தலங்களில் சூரியசக்தி திட்டங்களுக்காக மட்டும் ஒதுக்கீடு செய்தமைக்கு இதன்போது பிரதமர் நன்றி தெரிவித்தார்.
இதேவேளை, இந்திய-இலங்கை நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்துவதற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன மேற்கொண்டு வரும் எல்லையற்ற முயற்சிகளை இந்தியா மிகவும் பாராட்டுவதாக, இந்திய நிதி அமைச்சர் தெரிவித்தார்.
“பல தசாப்தங்களுக்கு முன்னர் நாம் எமது சுதந்திரத்துக்காக போராடிய போது, உங்கள் பெற்றோர் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்துடன் சம்பந்தப்பட்டிருந்ததுடன், இப்போது பிரதமராக நீங்கள் இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு நட்பு மற்றும் ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்த தொடர்ந்து செயற்பட்டு வருவதால், நாம் உங்களை மிகவும் மதிக்கிறோம்” என இந்திய நிதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன, பிரதமரின் செயலாளர் அநுர திஸாநாயக்க மற்றும் இரு நாடுகளின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.