தென்கிழக்குப்பல்கலைக்கழகத்தினால் பேராதனை பல்கலைக்கழக புவியியல்துறை மாணவர்களுக்கு கரையோர ஆய்வுகளில் புவிவெளியுருவவியலில் ட்ரோன் தொழில்நுட்ப பிரயோகம் தொடர்பான கலந்துரையாடலும்,களப்பயிற்சியும் தென்கிழக்குப் பல்கலைக்கழக புவியியற் துறைத்தலைவர் விரிவுரையாளர் கே.நிஜாமிர் தலைமையில், பேராசிரியர் எம்.ஐ.எம்.கலீல் ஒருங்கிணைப்பில் அண்மையில் நடைபெற்றது.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஆரம்ப நிகழ்வில் புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ்.ரபீக்கா அமீர்தீன் ஆரம்ப உரையாற்றியதோடு, பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எஸ்.எம்.ராசிக் கலந்துரையாடலின் நோக்கம் பற்றி மாணவர்களுக்கு விளக்கினார்.
பேராசிரியர் முதிக சுமனஜித் பெரேரா மற்றும் சிரேஷ்ட விரிவுரையாளர் சாந்த ஜெயகுமார, பேராதனை பல்கலைக்கழக புவியியற்துறை இறுதிவருட விஷேட மாணவர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் விரிவுரையாற்றிய தென்கிழக்கு பல் கலைக்கழக புவியியற்துறைத் தலைவர் கே.நிஜாமிர் இலங்கையின் தென்கிழக்கு பிராந்திய பகுதியில் கடலரிப்பு மற்றும் அவற்றுக்கான காரணங்களை விளக்கியதோடு அவை தொடர்பான ஆய்வுகளின் ட்ரோன் தொழில்நுட்பத்தின் பிரயோகம், வினைத்திறன் மற்றும் ஆய்வு விஞ்ஞானத்தன்மை தொடர்பாகவும் விளக்கினார்.மேலும் மாணவர்களுக்கு ட்ரோன் தொழில்நுட்ப வெளிக்கள பயிற்சியளிக்கப்பட்டதோடு தென்கிழக்கு கரையோரபிரதேசங்களில் களப்பயணங்களும் ஏற்பாடு செய்யப்பட்டன.
(கல்முனை மத்திய தினகரன் நிருபர்)