யாழ்ப்பாணம் மாநகரில் வீதியில் தரித்து நின்ற மோட்டார் சைக்கிளை திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையில் சந்தேகநபரொருவர் இன்று (03) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பூநகரியைச் சேர்ந்த 32 வயதுடைய சந்தேகநபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், அவரிடமிருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்கள் வெவ்வேறாக்கப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் செல்வா திரையரங்கு முன்பகுதியில் கடந்த 29ஆம் திகதி நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுவிட்டது என்று யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய குற்ற விசாரணை பிரிவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டது.
முறைப்பாட்டின் பிரகாரம் குற்ற விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி கேவா வசந் தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
யாழ். விசேட நிருபர்