நாவலடி கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு கருவேப்பங்கேணி பிரதேசத்தை சேர்ந்த 89 வயதுடைய உ.விஜயரத்ன என்பவரே நேற்றுமுன்தினம் இரவு நாவலடி கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் காலை 11.00 மணியளவில் நாவலடியிலுள்ள தனது மகனின் வீட்டிற்கு செல்லும் போதே அவர் காணாமல் போயுள்ளதாக தெரியவருகின்றது. இவரது சடலம் நாவலடி மயானத்திற்கு முன்பாக உள்ள கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுகோளுக்கு இணங்க மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி த.தவக்குமார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் நெருங்கிய உறவினர்களிடம் சடலத்தை ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
(கல்லடி குறூப் நிருபர்)