வவுனியா மன்னார் வீதியில் பிரதேச செயலகத்துக்கு முன்பாகவுள்ள பாதசாரி கடவையில் நேற்றுமுன்தினம் ஏற்பட்ட விபத்தில் மின்சார சபை ஊழியரான குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா – மன்னார் வீதியில் வவுனியா பிரதேச செயலகத்துக்கு முன்னால் உள்ள பாதசாரி கடவையில் வீதி ஓரமாக நடந்து சென்றவர் மீது பின்னால் வந்த ஹயஸ் ரக வாகனம் மோதியமையால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. முல்லைத்தீவில் மின்சார சபையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் குருமன்காடு கலைமகள் மைதானத்துக்கு அருகிலுள்ள வீட்டிலிருந்து தனது பணி நிமித்தம் முல்லைத்தீவு செல்வதற்காக பஸ் நிலையம் நோக்கி நடந்து சென்ற போதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் வவுனியா மன்னார் வீதி கலைமகள் மைதானத்துக்கு அருகில் வசித்து வந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 48 வயதுடைய நெளபர் என்பவர் படுகாயமடைந்து வவுனியா பொதுவைத்தியசலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(வவுனியா விசேட நிருபர்)