ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்குச் சொந்தமான (JMSDF) அகேபோனோ என்றழைக்கப்படும் தாக்கியழிக்க பயன்படுத்தப்படும் ‘AKEBONO’ (DD 108) கப்பல் நேற்று (28) இலங்கையை வந்தடைந்தது.
உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த ஜப்பானிய கப்பலை, இலங்கை கடற்படையினர் கடற்படை சம்பிரதாய முறைப்படி வரவேற்றனர்.
150.5 மீற்றர் நீளமுள்ள இந்த கப்பலில் அதன் தளபதி கொமாண்டர் ஹிசாடோ சோடோகாவா (Hisato SOTOKAWA) தலைமையில்
172 பேர் கொண்ட குழுவினர் சேவையாற்றுகின்றனர்.
கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வாவுக்கு ம் ஜப்பானிய கப்பலின் தளபதி கொமாண்டர் ஹிசாடோ சோடோகாவாவுக்கும் இடையே சிநேகபூர்வ சந்திப்பு ஒன்றும் திருகோணமலையில் இடம்பெற்றது.
மேற்படி கப்பல் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில், இரு கடற்படைகளுக்கு இடையே ஒத்துழைப்பையும் நல்லெண்ணத்தையும் மேலும் மேம்படுத்தும் வகையில் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பல நிகழ்ச்சிகளில் பணியாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இந்த கப்பல் ஒக்டோபர் 31ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்பட்டுச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளதோடு, கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான கடற்பரப்பில் இலங்கை கடற்படை கப்பலுடன் இணைந்து கடற்படை பயிற்சியில் (PHOTOEX) ஈடுபடவும் திட்டமிடப்பட்டுள்ளதாக, இலங்கை கடற்படை தலைமையகம் அறிவித்துள்ளது.
(ஸாதிக் ஷிஹான்)