கிழக்கு பங்களாதேஷில் இரண்டு ரயில்கள் ஒன்றோடொன்று மோதி விபத்திற்குள்ளானதில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேற்று (23) பிற்பகல் பங்களாதேஷ் டாக்கா மாகாணத்தின் கிஷோர்கஞ்ச் மாவட்டத்தில் இருந்து டாக்கா நோக்கி சென்று கொண்டிருந்த இகரொசிந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலும், சட்டோகிராம் நோக்கி பொருட்கள் ஏற்றி வந்த மற்றொரு ரயிலுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகின.
இகரொசிந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலானது புறப்பட்ட சில நிமிடங்களில் மாற்று தண்டவாள பாதைக்காக மாற்றப்பட்டு இருந்தது.
இவ்வாறு மாற்றப்பட்டு கொண்டிருக்கும் போதே நேருக்கு நேர் இரு ரயில்களும் மோதி விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்தில் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டுள்ள நிலையில் இதுவரையில் 17 பேர் உயிரிழந்துள்ளதாகவும் நூற்றுக்கணக்கானோர் காயமுற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இந்த மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் அதேவேளை பலியாகியோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.
சமிக்ஞை கோளாறே விபத்திற்கான காரணமாகவிருக்கலாம் என ரயில்வே அதிகாரி ஒருவர் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.