இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்குமாறு கோரும் கடிதம் மற்றும் வடக்கு, கிழக்கில் காணப்படும் சமகால நிலைமைகளை மையப்படுத்தியதான இராஜதந்திரிகளுக்கான கடிதம் ஆகியன இறுதியாகியுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளரும், யாழ். மாவட்டபாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு உட்பட அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இந்தியப் பிரதமரை தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக சந்தித்து விடயங்களை தெளிவுபடுத்த உள்ளதாக விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியாக கடமையாற்றிய ரி.சரவணராஜா வெளியேறிய விவகாரம் உள்ளிட்ட தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கொழும்பில் உள்ள இராஜதந்திரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
இதற்கென இவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான தனித்தனி கடிதங்களும் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இக்கடிதங்களில் கையெழுத்திடுவதற்கு கடந்தவாரம் நடந்த சந்திப்பில் அரெசியல் தலைவர்கள் இணங்கியதாகவும் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இதற்கமைவாக குறித்த கடிதங்களில் கட்சித் தலைவர்கள் கையொப்பமிட்டு ஒரு சில நாட்களில் இப்பணி பூர்த்தியாகும் என, எதிர்பார்ப்பதாகவும் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.