நிலைபேண்தகு அபிவிருத்தி திட்டத்திலுள்ள ‘பாதுகாப்பான மற்றும் தூய்மையான குடிநீர்’ என்ற இலக்கை 2030 ஆம் ஆண்டுக்குள் அடைவதே இலக்கென, அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். இதற்காக உட்கட்டமைப்பு, நிதி உள்ளிட்ட உதவிகளை ஐ.நாவின் குடிநீருக்கான ஸ்தாபனம் வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். ஒன்றிணைக்கப்பட்ட குடிநீர் முகாமைத்துவ கொள்கையின் பிரகாரம் குடிநீர் வழங்கலுக்காக பிரதம அமைச்சின் கீழ் தனியானதொரு செயலகம் நிறுவப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். ஜெனிவாவுக்கு பயணம் மேற்கொண்ட அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஐ.நாவின் குடிநீருக்கான ஸ்தாபனத் உயர் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார். ஜெனிவாவில் உள்ள உலக வானிலை அமைப்பின் தலைமையகம் (WMO) நடைபெற்ற இச்சந்திப்பில் ஐ.நாவின் குடிநீருக்கான ஸ்தாபனத்தின் உப தலைவர் யோகானஸ் கல்மன், உலகளாவிய கண்காணிப்பு பணிப்பாளர் வில் ரைட்எட், தலைமை நிபுணத்துவ அதிகாரி கலாஸ் மொல்டிவ்ஸ் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள நிறுவனத்தின் தலைவருமான பாரத் அருள்சாமி, அமைச்சின் ஆலோசகர் ஹரித்த விக்கிரமசிங்க ஆகியோர் அமைச்சருடன் சந்திப்பில் பங்கேற்றனர். குடிநீர் வழங்குதலில் ஏற்படவுள்ள கொள்கை ரீதியிலான மாற்றம், ஒன்றிணைக்கப்பட்ட குடிநீர் முகாமைத்துவ கொள்கை என்பன குறித்து ஐநா அதிகாரிகளுக்கு அமைச்சர் இதன்போது விளக்கமளித்தார். காலநிலை மாற்றம் தொடர்பான செயல் திட்டம் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது. குறிப்பாக ஒன்றிணைக்கப்பட்ட குடிநீர் முகாமைத்துவ கொள்கை ஊடாக, குடிநீர் தொடர்பான ஸ்தாபனங்கள் மற்றும் திணைக்களங்களை ஒன்றிணைத்து பிரதம அமைச்சரின்கீழ் தனியான செயலாமாக நீர்வழங்கல் கொண்டுவரப்படும். இதற்கான ஏற்பாடுகள், செயலகம் செயற்பட வேண்டிய விதங்கள் சம்பந்தமாகவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான், அதிகாரிகளுக்கு எடுத்துரைத்தார்.