Friday, April 19, 2024
Home » தமிழரின் அழிவு, அனுபவங்கள் உலகுக்கும் நல்லதொரு பாடம்

தமிழரின் அழிவு, அனுபவங்கள் உலகுக்கும் நல்லதொரு பாடம்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு

by damith
October 23, 2023 6:00 am 0 comment

எமது உரிமைப் போராட்ட அனுபவங்களும் அழிவு யுத்த முடிவுகளும் சகல மக்களுக்கும் பாடமாக அமைந்து விட்டது. சமாதான பேச்சுக்கான கதவுகளை இறுக மூடிவிட்டு ஆயுதங்களால் எதையும் அடைந்துவிட முடியும் என்ற அதீத நம்பிக்கையால் ஏற்பட்ட விளைவுகளே அந்தப் படிப்பினைகள் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீன – இஸ்ரேல் விவகாரம் தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை (20) பாராளுமன்றத்தில் நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

“‘எமது முன்னோர்கள் காத்துவந்த மரத்தின் விதைகளை நான் மறவாது காத்திருக்கிறேன். இந்த விதைகளையே எனது தாயக்கத்தில் மீண்டும் விதைப்பேன். எழுபது ஆண்டுகளான ஆக்கிரமிப்பிற்கும் அவலங்களுக்கும் மத்தியில் பாலஸ்தீன மண்ணில் இருந்து எழும் நம்பிக்கையின் குரல் இது.

இஸ்ரேல் படையினருக்கும் ஹமாஸ் இயக்கத்திற்குமிடை யிலான மோதல் குறித்தும் மக்களின் அவலங்கள் குறித்தும் எனது கருத்துக்களை வழங்கியமைக்கு முதலில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போது நடக்கும் இந்த மோதலானது இரு தரப்பிலும் ஆயிரக் கணக்கான பொது மக்களை காவு கொண்டிருக்கின்றது. பலரை அங்கவீனமாக்கியுள்ளது. பல வள அழிவுகளைத் தந்து கொண்டிருக்கிறது.

நீடித்த காலமாக பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. ஆனால், இதுவரையில் சுமுகமான தீர்வு எதுவும் எட்டப்படவில்லை.

இருதரப்பினரும் சமாதானத்திற்கு வரவேண்டுமானால் சில விடயங்கள் குறித்து முக்கிய தீர்மானங்கள் எடுக்க வேண்டும். ஒன்று, பிற நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ள பாலஸ்தீனிய அகதிகளின் நிலை பற்றியது. இவர்களுக்கான வழி என்ன? என்பது தொடர்பில் இருதரப்பினரும் இதுவரை எந்தவிதமான தீர்வுகளுக்கும் வரவில்லை. எனவே, இவ்விடயம் தொடர்பில் தீர்வு எட்டப்பட வேண்டியுள்ளது. இரண்டாவது, மேற்கு கரையில் இஸ்ரேலினால் கட்டப்பட்டுள்ள குடியிருப்புக்கள் தொடர்பான விடயம். சர்வதேச விதிகளின்படி இந்தக் குடியிருப்புக்கள் சட்டவிரோதமானவை. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை நிலைப்பாடிது. இதனை இஸ்ரேல் மறுத்துள்ளது. எனவே, இந்தக் குடியிருப்புக்கள் அகற்றப்பட வேண்டுமா? இல்லையா என்பது தொடர்பில் தீர்வு எட்டப்பட வேண்டும்.

மூன்றாவது, ஜெருசலேம் நகரை இரண்டு தரப்பினரும் பகிர்ந்து கொள்வதா? இல்லையா/ என்பது குறித்து இரண்டு தரப்பினரும் தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

நான்காவது, இஸ்ரேலைப் போன்று பாலஸ்தீனமும் தனியான சுதந்திர நாடாக கருதப்படுமா என்பது தொடர்பிலும் தீர்வு காண ப்பட வேண்டும். மேற்படி விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தி நிரந்தர தீர்வு எட்டப்பட்டு விட்டால், அங்கு நிரந்தர சமாதானத்தை எட்டுவதற்கான சாத்தியங்கள் அதிகமாகும்.

நானும் எமது மக்களுக்கான நீதியான உரிமைப் போராட்டத்தை வழிநடத்தியவன். அந்தப் போராட்டத்தில் நான் தமிழ் மக்களை மாத்திரம் நேசித்தவன் அல்ல. ஒடுக்கப்பட்ட மக்கள் என்ற அடிப்படையில் மலையக மற்றும் இஸ்லாமிய மக்களை மாத்திரமன்றி சிங்கள மக்களையும் ஆழமாக நேசித்தவன். அதுபோல, உலக அரங்கில் எங்கெல்லாம் விடியலுக்கான போராட்டங்கள் நடந்தனவோ, அங்கெல்லாம் உள்ள மக்களையும் நேசித்தவன்.

பாலஸ்தீனம் 1978 இல் எமக்கு ஆயுதப் பயிற்சி தந்தது. 1984ஆம் ஆண்டிலும் தோழர்களை அங்கு பயிற்சிக்கு அழைத்துச் சென்றிருந்தேன். அப்போது பாலஸ்தீன மக்களுடன் நான் பழகியிருக்கின்றேன். அவர்களின் ஆழமான உணர்வுகளையும் விரும்பங்களையும் உணர்ந்திருக்கின்றேன். எமது பயிற்சியின் போது அவர்களின் போராட்டங்களிலும் நான் களத்தில் நின்று பங்குபற்றியுள்ளேன். ஆர்ப்பாட்டங்களிலும் கலந்து கொண்டிருக்கின்றேன்.

அங்கிருந்த பல்வேறு விடுதலை இயக்கங்களுடனும் பன்னாட்டு விடுதலை இயக்கங்களுடனும் பழகி இருக்கின்றேன். அவர்களது வழிமுறைகளையும் செயற்பாடுகளையும் அப்போது ஆராய்ந்து பார்த்திருக்கிறேன் என்றும் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT