வவுனியா ஹொரவப்பொத்தனை வீதியில் பள்ளிவாசலை அண்மித்த பகுதியில் நேற்று (21) மாலை 6.00 மணியளவில் காரில் வந்த இனந்தெரியாத நபர்கள் மதுபான போத்தலை இ.போ.ச பஸ் மீது வீசி விட்டு தப்பித்து சென்றுள்ளனர்.
பராக்கிரமபுர பகுதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வவுனியா சாலைக்கு சொந்தமான இ.போ.ச பஸ் ஹொரவப்பொத்தனை வீதி பள்ளிவாசலை அண்மித்த சமயத்தில் காரில் வந்த இனந்தெரியாத நபர்கள் குறித்த பஸ்ஸின் கண்ணாடி மீது மதுபான போத்தலை வீசிவிட்டு தப்பித்துச்சென்றுள்ளனர்.
இத் தாக்குதல் சம்பவத்தினால் பஸ்ஸின் கண்ணாடி சேதமடைந்ததுடன் அப்பகுதியூடான போக்குவரத்தும் 30 நிமிடங்கள் ஸ்தம்பிதம் அடைந்திருந்தன.
சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் சம்பவம் தொடர்பிலான முழுமையான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியா விசேட நிருபர்