Thursday, March 28, 2024
Home » பெண்களின் உரிமைகளை உறுதிப்படுத்திய மார்க்கம்

பெண்களின் உரிமைகளை உறுதிப்படுத்திய மார்க்கம்

by Rizwan Segu Mohideen
October 20, 2023 11:42 am 0 comment

இஸ்லாத்தின் இறுதித்தூதர் நபி (ஸல்) அவர்கள் ஒரு தடவை தோழர்களுடன் அமர்ந்து அலவளாவிக் கொண்டிருந்தார்கள். அப்போது இஸ்லாத்திற்கு முந்தைய அறியாமைக்கால பேச்சு எழுந்தது. அச்சமயம் தோழர் ஒருவர் தன் அடி மனதில் உறைந்து கிடந்த நிகழ்வைச் சொல்லத் தொடங்கினார்.

‘இறைத்தூதரே! அந்த அறியாமைக்காலத்தில் என் மனைவி நிறை மாதக் கர்ப்பிணியாக இருந்த சமயம், நான் வியாபார விடயமாகப் பயணம் செல்ல வேண்டிய ஏற்பட்டது. அப்போது என் மனைவியிடம், ‘ஆண் குழந்தை பிறந்தால் பத்திரமாகப் பார்த்துக்கொள். பெண் குழந்தை பிறந்தால் கொன்று புதைத்து விடு’ என்று சொன்னேன். பிறகு நான் பயணத்தில் இருந்து திரும்பியபோது மனைவி, ‘நமக்குப் பெண் குழந்தை பிறந்தது. நல்லவேளை அது இறந்து விட்டது’ என்று என்னிடம் சொன்னாள்.

சில ஆண்டுகள் சென்றன. ஒருநாள் என் வீட்டிற்கு ஒரு அழகான பெண் குழந்தை வந்து விளையாடுவதைக் கண்டு, ‘யாரவள்?’ என்று திடுக்கிட்டுக் கேட்டேன். அதற்கு என் மனைவி, ‘பக்கத்து வீட்டுக் குழந்தை’ என்றாள். அக்குழந்தை என்னிடம் பழகத் தொடங்கியது. குழந்தைக்கும் எனக்கும் இடையே இருந்த பாசத்தைக் கண்ட என் மனைவி, ‘இக்குழந்தை மீது உங்களுக்கு அவ்வளவு பாசமா?’ என்று கேட்டாள். ‘ஆம்.. இவள் என் உயிரல்லவா?’ என்றேன். அப்போது என் மனைவி, ‘அன்று நான் சொன்னது பொய். இது பக்கத்து வீட்டு குழந்தை அல்ல. நம் குழந்தைதான். உங்களுக்குப் பயந்து நான் அப்படிச் சொன்னேன்’ என்றாள்.

ஆனால் நான் அறியாமைக் காலத்து வெறித்தனத்தில், அக்குழந்தையைக் கொல்ல முடிவு செய்தேன். ஆனாலும் பாசம் என்னை விடவில்லை. பாசத்திற்கும், அறியாமைக்கால சிந்தனைகளுக்கும் இடையே நடந்த போராட்டத்தில் பாசம் தோற்றது.

ஒருநாள் என் அன்பு மகளைப் பாலைவன வெளிக்கு அழைத்துச் சென்றேன். என்னுடன் அவள் விளையாடிக் கொண்டும், கதை பேசிக் கொண்டும் இருந்தாள். ஒரு இடத்தில் குழியைத் தோண்டினேன். பாலைவனத்தின் மணல் என் தாடியில் பதிந்தன. அந்தச் செல்ல மகள் ஏதும் அறியாமல், தன் பிஞ்சு விரல்களால் என் தாடியில் உள்ள மணலைத் தட்டி விட்டாள். அப்படியிருந்தும் நான் கல்நெஞ்சக்காரன். என் மகளைக் குழியில் தள்ளி மணலைப் போட்டு, உயிரோடு புதைத்து விட்டேன் இறைத்தூதரே’ என்று அந்நபித்தோழர் சொன்னதும், நபிகளார் அழ ஆரம்பித்து விட்டார்.

அருகில் இருந்த தோழர்கள், அத்தோழரைப் பார்த்து, ‘என்ன காரியம் செய்தீர்? நபிகளாரையே அழச் செய்து விட்டீரே!’ என்றபோது, நபி(ஸல்), ‘அந்தக் காலம் மறைந்து விட்டது. நாம் பாவமன்னிப்பைத் தேடி மீண்டு விட்டோம்’ என்று கூறியவண்ணம் தனது தாடி நனையும் அளவு அழுதார்கள்.

பின்னர் நபி(ஸல்) அவர்கள், ‘நாம் எவ்வளவு கல் நெஞ்சகர்களாய் இருந்துள்ளோம். (இஸ்லாத்தின் வருகைக்கு முந்தைய) அறியாமைக் காலத்தில் செய்த செயல்கள் அனைத்தையும் இறைவன் மன்னித்து விடுவான். ஆகவே உமது நற்செயல்களை புதுப்பித்துக் கொள்வீராக!’ என்று அத்தோழரைப் பார்த்துக் கூறினார்கள்.

(நபிமொழி)

நபி (ஸல்) அவர்கள் தாம் வாழ்ந்த காலத்திலேயே பெண் குழந்தைகளைப் புதைக்கும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள். அதேநேரம் அல் குர்ஆன், ‘வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்’ (6:151) என்ற இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

மறுமையில் உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தையிடம், ‘எந்தக் குற்றத்திற்காக நீ கொல்லப்பட்டாய்?’ (81:8) என்று கேட்கப்பட்டு, குற்றம் புரிந்தவர்களுக்குத் தண்டனை வழங்கப்படும் என்ற வசனத்தை ஒதிக்காட்டி மக்களை எச்சரிக்கவும் அன்னார் தவறவில்லை.

அதேநேரம் நபி (ஸல்) அவர்கள், ‘ஒருவன் தன் பெண் குழந்தைகளை உயிருடன் புதைக்காமலும், கொடுமைப்படுத்தாமலும், ஆண் குழந்தைகளுடன் ஒப்பிட்டு வேறுபாடு காட்டாமலும் இருந்தால், இறைவன் அவனைச் சுவர்க்கத்தில் நுழையச் செய்வான்’என்று கூறினார்கள்.

(ஆதாரம்: அபூதாவூத்)

மற்றொரு சந்தர்ப்பத்தில், ‘ஒருவருக்கு மூன்று பெண் குழந்தைகள் இருந்து, அவர்களைச் சிறந்த முறையில் வளர்த்து, கருணை புரிந்து, எவ்விதத் தீங்கும் செய்யாமல் இருந்தால் அவருக்குச் சுவர்க்கம் நிச்சயம்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதும் அருகில் இருந்த நபித்தோழர் ஒருவர், ‘இறைத்தூதர் அவர்களே! இரு பெண் குழந்தைகள் என்றால்…?’ அதற்கு நபிகளார், ‘இரு பெண் குழந்தைகள் என்றாலும் சரியே!’ என்றார்கள். (நபிமொழி)

ஆண்களும், பெண்களும் ஒரே மூலத்தில் இருந்தே படைக்கப்பட்டார்கள். எனவே இருவருமே கண்ணியத்திற்குரியவர்கள், சமமானவர்கள்.

இவ்வாறு பெண்களின் மாண்பை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்ட நபி(ஸல்) அவர்கள், பெண் சிசுக்கொலையை நிறுத்தியதோடு பெண்களின் உரிமைகளையும் உறுதிப்படுத்தினார்கள். மணவிலக்குப் பெறும் உரிமை, மறுமண உரிமை, பொருளீட்டும் உரிமை, சொத்துரிமை, வாரிசுரிமை, கல்வி உரிமை, அரசியலில் பங்கேற்கும் உரிமை என ஆண்களுக்குரிய எல்லா உரிமைகளையும் பெண்களுக்கும் பெற்றுக்கொடுத்தார்கள்.

அபூ மதீஹா

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT