சர்வதேச விமான நிலையமாக இயங்கி வரும் பலாலி விமான நிலைய பயணிகள் முனையத்தின் வசதிகளை மேம்படுத்துவதற்கு துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிப்பால டி சில்வா, விமான அதிகாரிகளுக்கும் பணிப்புரை வழங்கியுள்ளார்.
பலாலி விமான நிலையத்தில் மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின் பின்னர் இந்த முடிவை எடுத்துள்ளதாக துறைமுகங்கள் கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது சென்னையிலிருந்து தினந்தோறும் 60 பயணிகளை ஏற்றிக்கொண்டு “எலாயன்ஸ்” நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் சேவைகளை மேற்கொள்கிறது.
எதிர்காலத்தில் இண்டிகோ நிறுவனத்துக்கு சொந்தமான விமானமும் சென்னைக்கும் பலாலிக்குமிடையே விமான சேவையை தொடங்கவுள்ளது.
இந்த சர்வதேச விமானங்களுக்கு மேலதிகமாக இரத்மலானை விமான நிலையத்திலிருந்து ஒவ்வொரு வாரமும் “டி.பி. எவியேஷன்’ நிறுவனத்துக்கு சொந்தமான நான்கு விமானங்களும் ‘சினமன் எயார்’ நிறுவனத்துக்கு சொந்தமான நான்கு விமானங்களும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து உள்ளூர் விமான சேவைகளை மேற்கொள்ளவுள்ளன.
எதிர்காலத்தில் இந்த விமான சேவைகள் அதிகரிக்கப்படவுள்ளதால், பலாலி விமான நிலையத்துக்கு வரும் மற்றும் புறப்படும் பயணிகளின் வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என அமைச்சர் பலாலி விமான நிலையத்தில் தெரிவித்தார்.
இந்த வசதிகளை அதிகரிப்பதற்காக 200 மில்லியன் ரூபாயளவில் செலவிட வேண்டியுள்ளதாக விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவன அதிகாரிகள் அமைச்சருக்கு தெரிவித்தனர்.
இத்திட்டத்தின் கீழ் தற்போதுள்ள பயணிகள் முனையத்தை விரிவுபடுத்தல், வரியில்லா வர்த்தக வளாகங்களை அமைத்தல், சுகாதார வசதிகளை அதிகரித்தல், குடிவரவு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தேவையான வசதிகளை வழங்குதல் போன்ற உட்கட்டமைப்பை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பலாலி விமான நிலைய வசதிகளை ஆராயும் கண்காணிப்பு விஜயத்தின் போது விமான நிலைய மற்றும் விமான சேவைகள் பணிப்பாளர் கயான் அழகேவத்த உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.