கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் வழக்கு ஆவணங்களின் நிலக்கீழ் பாதுகாப்பு அறை, நேற்று (17) அதிகாலை இரண்டாவது தடவையாகவும் உடைக்கப்பட்டுள்ளதாக வாழைத் தோட்டம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலக்கீழ் அறையில் பழைய வழக்கு ஆவணங்கள், துப்பாக்கிகள் மற்றும் தங்க பொருட்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 22 ஆம் திகதி இரவு இந்த நிலக்கீழ் வழக்கு ஆவண பாதுகாப்பு அறை உடைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வரும் சந்தர்ப்பத்திலேயே, இந்த அறை இரண்டாவது முறையாகவும் உடைக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றின் பாதுகாப்புக்காக தனியார் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகளும் வாழைத் தோட்ட கெசல்வத்தை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் இருந்ததாக தெரியவந்துள்ளது. மேலும், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமரா இயங்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
இரண்டு இரும்பு கதவுகள் உள்ள இந்த நிலக்கீழ் அறை 4 போல்ட்களால் பூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அனைத்து போல்ட்களும் உடைக்கப்பட்டுள்ளதாகவும் வாழைத்தோட்ட பொலிஸார் தெரிவித்தனர். முன்னதாக, இந்த நிழக்கீழ் அறையின் திறப்பு உடைக்கப்பட்ட பிறகு, புதிய திறப்புகள் போடப்பட்டிருந்தன. இம்முறையும் அதே திறப்புகள் உடைக்கப்பட்டதாகவும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.