யாழ்ப்பாணம், ஜனாதிபதி மாளிகையை சூழவுள்ள ஆலயங்கள், மடாலயங்கள் என்பவை விடுவிக்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச்செயலாளர் உமா சந்திரபிரகாஸ் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த இப்பிரதேசத்தில் அமைக்கப்பட்ட ஐனாதிபதி மாளிகை, தற்போது தனியார் நிறுவனம் ஒன்றுக்கு 50 வருட கால பகுதிக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.இப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து 33 வருடங்களுக்கு மேலாக தற்காலிக இடங்களில் வசிப்போர், தம்மை மீள்குடியேற்றுமாறு போராட்டங்களிலீடுபட்டு கோரிக்கைகளையும் விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில்,அவர்களை மீள் குடியேற்றாமல் அவர்களின் காணிகளை சட்டவிரோதமாக சுவீகரித்து, தனியார் நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடுத்துள்ளனர்.
முதலீட்டாளர்கள் வடமாகாணத்தை நோக்கி வருவதை வரவேற்கிறோம். அவர்கள் சட்ட ரீதியாக எமது மக்களை பாதிக்காத வகையில் அவர்களின் முதலீடுகள் அமைய வேண்டும்.
ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள சுமார் 12 ஏக்கர் காணியை எடுத்துக்கொண்டு , அதற்குள் இருக்கும் தனியார் காணிகளுக்கான இழப்பீடுகளை தற்போதைய சந்தை பெறுமதியின் அடிப்படையில் வழங்க வேண்டும். அதேவேளை ஜனாதிபதி மாளிகையை சூழவுள்ள சுமார் 18 ஏக்கர் காணியையும் உடனடியாக காணி உரிமையாளர்களுக்கு கையளிக்க வேண்டும். அத்துடன், ஜனாதிபதி மாளிகையை சூழவுள்ள பகுதிகளில் தொன்மையான ஆலயங்களான ஆதி சிவன் ஆலயம், விஷ்ணு ஆலயம், சடையம்மா மடம் உள்ளிட்ட மடாலயங்கள் என்பவை விடுவிக்கப்பட வேண்டும் என்றார்.
யாழ். விசேட நிருபர்