இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய வாவியான மட்டக்களப்பு வாவியில் கலக்கும் கழிவுகள் மற்றும் குப்பைகளால் வாவி மாசடைந்துவருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் வாவியின் அருகிலுள்ள மகாத்மா காந்தி பூங்காவில் பொழுதைக் கழிக்க வருபவர்கள் பெரும் அசௌகரியங்கள் எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர். அதுமட்டுமின்றி வாவியில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களும் பெரும் பாதிப்புகள் எதிர்நோக்கிவருகின்றனர். மிகப் பெரிய இயற்கை வாவியான மட்டக்களப்பு வாவி உலகப் புகழ்பெற்ற அதிசய வாவியாகும். இவ்வாவியிலுள்ள மீன்கள் பாடியதாகவும் அதனை ஆங்கிலேயர் ஆட்சியின் போது ஒலிப்பதிவு செய்ததாகவும் அதனாலேயே மட்டக்களப்பிற்கு பாடும் மீன்கள் கூடும் நகரம் என்றும் மீன்பாடும் தேனாடு என்றும் பெயர் வந்ததாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.
இப்போது வாவியின் ஓரங்களில் குப்பைகளைக் கொட்டுவதாலும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் கழிவுகளை வீசுவதாலும் வாவி மிகவும் அசுத்தமடைந்து வாவியின் கரையோரப் பகுதிகள் மாசடைந்து காணப்படுகின்றது. இதனால் வாவியோடு இணைந்துள்ள காந்தி பூங்காவில் ஓய்வுக்காக வருபவர்கள் பெரும் அவலங்களை எதிர்கொண்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
(மட்டக்களப்பு குறூப் நிருபர்)