நவராத்திரி திருவிழாவுக்காக பிரதமர் நரேந்திர மோடி எழுதிய கர்பா பாடல் நேற்று முன்தினம் (14) வெளியிடப்பட்டதோடு, பாடல் வெளியான 5 மணி நேரத்தில் அதை 5 இலட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.
நவராத்திரி விழாவுக்காக சில ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் மோடி ஒரு பாடலை எழுதினார். இந்நிலையில் தற்போது அந்தப் பாடலுக்கு இசையமைத்து வீடியோ ஆல்பமாக டெல்லியில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. 190 விநாடிகள் ஓடக்கூடிய இந்த பாடல், கர்பா வகைப் பாடல் என்று அழைக்கப்படுகிறது.
இதுதொடர்பான தகவல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது. பாடகி த்வனி பனுஷாலி குரலில் வெளியாகியுள்ள இப்பாடலுக்கு இசை அமைப்பாளர் தனிஷ்க் பாக்சி இசையமைத்துள்ளார். இப்பாடல் கலாசார பன்முகத்தன்மை, ஒற்றுமை ஆகியவற்றை எடுத்துரைப்பதாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் மோடியுடன் பணியாற்றியது குறித்து இப்பாடலின் தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானி கூறும்போது, ‘‘பிரதமர் நரேந்திர மோடியுடன் பணியாற்றியது எனக்கு பெருமை. இந்தப் பாடல் அருமையாக வந்துள்ளது. அனைவருக்கும் பிடித்த வகையில் பாடல் அமைந்துள்ளது” என்றார்.
பாடல் குறித்து பாடகி த்வனி பனுஷாலி கூறும்போது, “மீண்டும் பிரதமர் மோடியுடன் ஒரு புதிய பாடலுக்கு கூட்டணி அமைக்க விரும்புகிறேன்” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
கார்போ என்று தலைப்பிடப்பட்டு பாடல் வெளியாகியுள்ள இந்தப் பாடலை ஏராளமானோர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்தப் பாடல் குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறும்போது, “இந்தப் பாடல் எனக்கு பல நினைவுகளை மீண்டும் கொண்டு வருகிறது. நான் பல ஆண்டுகளாக எழுதவில்லை. தற்போது வெளியாகியுள்ள இந்தப் பாடல் பல ஆண்டுகளுக்கு முன்பு எழுதியதாகும். கடந்த சில நாட்களாக ஒரு புதிய கர்பா பாடலை என்னால் எழுத முடிந்தது. அதை நவராத்திரி திருவிழாவின்போது பகிர்ந்து கொள்கிறேன். பாடகி த்வனி பனுஷாலி, இசையமைப்பாளர் பாக்சி ஆகியோருக்கு நன்றி’’ என தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.