நவராத்திரி விழாவையிட்டு மத்திய மாகாண பாடசாலைகளில் கல்வி பொதுத்தராதர சாதாரணதர முன்னோடிப் பரீட்சையை எதிர்வரும் 25ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பித்து நவம்பர் மாதம் 04ஆம் திகதி முடிவுறும் வண்ணம் நடத்த திட்டமிட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
நவராத்திரி விழா நிமித்தம் மத்திய மாகாண பாடசாலைகளில் இம்மாதம் 23ஆம் திகதியிலிருந்து நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கல்வி பொதுத்தராதர சாதாரணதர முன்னோடிப் பரீட்சையை 25ஆம் திகதி முதல் நடைபெற ஏற்பாடு செய்யுமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் மத்திய மாகாண ஆளுநர் லலித் யு. கமகேவிடம் கடிதம் மூலம் விடுத்த வேண்டுகோளிற்கிணங்க பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது வருடந்தோறும்; தமிழ் பாடசாலைகளில் நவராத்திரி விழா சார்ந்த பூஜை வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்று வருவது ஒரு சிறப்பம்சமாகும். அவ்வகையில் இவ்வருடமும் இம்மாதம் 15ம் முதல் 24ம் திகதி வரை பூஜை வழிபாடுகள் நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் மத்திய மாகாண பாடசாலைகளில் கல்வி பொதுத்தராதர சாதாரணதர முன்னோடி பரீட்சை இம்மாதம் 23ம் திகதி முதல் நவம்பர் மாதம் 02 ஆம் திகதி வரை நடைபெற மத்திய மாகாண கல்வி திணைக்களத்தினால் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இவ் ஏற்பாடானது. நவராத்திரி விழா தமிழ் பாடசாலைகளில் இடம்பெறுவதற்கு ஒரு தடையாகவிருக்கும் என்ற விடயம் கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் அவர்களின் கவனத்திற்கு மலையக ஆசிரியர் முன்னணி உள்ளிட்ட பல்வேறு தரப்பினரால் கொண்டுவரப்பட்டது. அதனை தொடர்ந்து கல்வி இராஜாங்க அமைச்சர் இவ்விடயம் தொடர்பாக ஒரு நீண்ட விளக்கக் கடிதத்தை மத்திய மாகாண ஆளுனருக்கு அனுப்பியதோடு பரீட்சையை பிற்போடுமாறும் கேட்டுக்கொண்டார். இதன் தார்ப்பரியத்தை புரிந்துக்கொண்ட மத்திய மாகாண ஆளுனர் உடனடியாக செயற்பட்டு கல்வி பொதுத்தராதர சாதாரணதர முன்னோடிப் பரீட்சையை எதிர்வரும் 25ம் திகதி புதன்கிழமை ஆரம்பித்து நவம்பர் மாதம் 4ம் திகதி முடிவுறும் வண்ணம் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மத்திய மாகாண ஆளுனரின் இச்செயற்பாடானது தமிழ் பாடசாலைகள் மற்றும் இந்து சமய அமைப்புகளின் மத்தியிலும் பெறும் வரவேற்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.