Saturday, April 20, 2024
Home » நவராத்திரி: ஒன்பது ராத்திரிகள்; ஏன், எதனால் ஒன்பது?

நவராத்திரி: ஒன்பது ராத்திரிகள்; ஏன், எதனால் ஒன்பது?

by damith
October 16, 2023 6:00 am 0 comment

நவராத்திரி என்றதுமே நம் அனைவருக்கும் உடனே நினைவுக்கு வருவது கீழ்க்கண்ட இனிய பாடல்:

நவராத்திரி, சுப ராத்திரி

அலை மகளும், கலை மகளும்

கொலுவிருக்கும் ராத்திரி

மலை மகளும் சேர்ந்து நம்மை

மகிழ வைக்கும் ராத்திரி

நவராத்திரி என்றால் “ஒன்பது இரவுகள்” என்று பொருள். அமாவாசையை அடுத்து வரும் ஒன்பது நாட்கள் நவராத்திரி எனப்படுகிறது.

பெண்களுக்கே உரித்தான இந்த நவராத்திரியின் சிறப்பு:

காளையர்க்கு ஓரிரவு சிவராத்திரி அல்லது வைணவர்களுக்கு வைகுண்ட ஏகாதசி ஆனால் கன்னியர்க்கு ஒன்பது நாள் நவராத்திரி.

ஆண்டிற்கு நான்கு நவராத்திரிகள் உண்டு – உங்களுக்கு தெரியுமா?

சக்தியைச் சித்திரை மாதத்தில் வழிபடுவது வசந்த நவராத்திரி எனப்படும்.

ஆஷாட நவராத்திரி, ஆனி, ஆடி மாதத்தில் வரும் நவராத்திரியாகும்.

புரட்டாசி மாதத்தில் வழிபடுவது பாத்ரபத நவராத்திரி அல்லது சாரதா நவராத்திரி எனப்படும். புரட்டாசி மாதம் அமாவாசை அடுத்த நாள் முதல் வரும் நவராத்திரியே மிகப் பிரதானமாக எல்லோரும் கொண்டாடுகிறார்கள். புரட்டாசி மாதத்தின் வளர் பிறையில் பிரதமை திதியில் ஆரம்பித்து ஒன்பது திதியுடன் பத்தாவது திதியான தசமி திதியுடன் நிறைவு பெறுகிறது

தை மாதத்தில் கொண்டாடப்படுவது சியாமளா நவராத்திரி. (தை மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள்).

நவராத்திரி பண்டிகை உருவானது எப்படி?

எருமை உருவம் கொண்ட அரக்கிக்கும் கம்பன் என்பவனுக்கும் பிறந்தவன் தான் மகிசாசூரன் ஆவான். அதனால் தான் மனித உடலுடனும் எருமைத் தலையுடனும் பிறந்தான்.

இவன் பிரம்மனை குறித்து பல ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்து தனக்கு யாராலும் மரணம் நேரக் கூடாது, என்றும் அப்படி நேர்ந்தால் அது ஒரு பெண்ணால் தான் இருக்க வேண்டும் என்ற வரத்தைப் பெற்றான்.

இதன்பின் அவன் தேவர்களைத் துன்புறுத்தத் துவங்கினான். அன்னை சக்தி பெண்ணுருவம் பூண்டு தேவர்களை காக்க பூமியில் பிறந்தார். சக்தி தேவி மகிசாசூரனுடன் போர் புரிந்து மகிசாசூரனின் எருமைத் தலையைத் தனது சக்கரத்தால் வெட்டி வீழ்த்தினார்.

தேவர்கள் மகிழ்ந்தனர். மகிசாசூரனிடம் போராடிப் போர் செய்து தேவலோகத்தையும், பூலோகத்தையும் காப்பாற்றியதால் “மகிசாசுரவர்த்தினி” என்று சக்தியைப் போற்றினார்கள். ஒன்பது நாள் போர் செய்து பத்தாவது நாள் தேவி வெற்றி பெற்றதால் பத்தாம் நாள் விஜயதசமி என்று கொண்டாடப்படுகிறது.

நவராத்திரியில் முதன்மையாக திகழ்பவர்கள் யார்?: மகிசாசூரன் மற்றும் அன்னை சக்தி இருவருமே.

நவராத்திரி 2023

இந்த ஆண்டு நவராத்திரி விரதமானது நேற்று அக்டோபர் 15 ஆம் திகதி ஆரம்பமானது. இந்நவராத்திரி அக்டோபர் 24 வரை நடைபெறவுள்ளது.

நவராத்திரி விழா. நவராத்திரி விழா இரவு நேரத்தில் தான் (மாலை 6 முதல் 9 மணி வரை) பூஜை செய்யப்படும். இந்த பூஜை தேவர்கள் செய்யப்படுவதாக கருதப்பட்டு பெண்கள் மாலை மற்றும் இரவில் நவராத்திரியை வழிபடுவார்கள்

இந்த நாளில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய பூஜைகள் மற்றும் விரதத்தை அனுஷ்டிக்கும் முறைகள் பற்றி இந்த பதிவில் மேலும் தெரிந்துக் கொள்வோம்.

நவராத்திரி விரதம்:

நவராத்திரியானது இந்து மக்களால் எந்த நாட்டில் இருந்தாலும் கொண்டாடப்படும் ஒரு விரத முறை எனலாம்.

நவராத்திரி விரதங்களும் பல வகைகளைக் கொண்டுள்ளன. இந்த ஒன்பது நாட்களிலும் சிலர் தண்ணீர் மட்டுமே எடுத்துக் கொள்கிறார்கள், சிலர் பழங்களை சாப்பிடுகிறார்கள், சிலர் ஒரு நாளைக்கு ஒரு வேளை சாப்பிடுகிறார்கள்.

நவராத்திரி விரதத்தின் போது கோதுமை மற்றும் அரிசி போன்ற வழக்கமான தானியங்கள் அனுமதிக்கப் படுவதில்லை.

நவராத்திரி விரதத்தின் போது அனைத்து வகையான பழங்களையும் சாப்பிடலாம். சிலர் இந்த ஒன்பது நாட்களும் பழங்கள் மற்றும் பால் மட்டுமே உண்டு விரதம் இருப்பார்கள்.

நவராத்திரி விரதத்தின் போது, பெரும்பாலான மக்கள் காய்கறிகள் – உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளி இனிப்பு உருளைக்கிழங்கு, சூரன் கிழங்கு, பூசணி, கீரை, தக்காளி, வெள்ளரி, கேரட் போன்றவற்றை உட்கொள்கிறார்கள்.

நவராத்திரி விரதத்தின் போது பால் மற்றும் பால் பொருட்கள், உட்கொள்ளப்படுகின்றன.

வெங்காயம் அல்லது பூண்டைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட உணவுகள் தவிர்க்கப்பட வேண்டும். அசைவ உணவுகள், முட்டை, மது, புகைபிடித்தல் ஆகியவையும் உட்கொள்ளக் கூடாது

நவராத்திரி பண்டிகை கொண்டாட்டங்கள்

நவராத்திரியின் தனிச்சிறப்பே இது முழுக்க முழுக்க பெண்களுக்கான பண்டிகையாகும்.

அம்பாளுக்குரிய பண்டிகைகள் எவ்வளவோ இருந்தாலும், அவற்றுள் முக்கியமானது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாதான்.

இந்த நவராத்திரி பண்டிகை புரட்டாசி மாத வளர்பிறைப் பிரதமையில் தொடங்கி விஜயதசமியில் நவராத்திரி முடிகிறது.

முதல் ஒன்பது நாட்களில் முப்பெரும் தேவியரை வழிபடவேண்டும்.

முதல் மூன்று நாட்கள் துர்க்கையின் வழிபாடு.

நடுவில் உள்ள மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடு.

கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு.

முப்பெரும் சக்திகளில், ஒவ்வொரு சக்திக்கும் மும்மூன்று அம்சங்கள் உள்ளன.

துர்க்கை: மகேசுவரி, கெளமாரி , வாராகி.

இலட்சுமி: மாகா லெட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி.

சரஸ்வதி : சரஸ்வதி, நாரசிம்மி , சாமுண்டி.

நவராத்திரியின் போது இந்த ஒன்பது தேவியர்களையும் முறையாக வழிபடுகிறோம். ஒரு தேவியை முதன்மையாகவும், மற்றவர்களைப் பரிவார அம்ச தேவதைகளாகவும் கொண்டாடுகிறோம்.

சரஸ்வதி பூஜை சிரவணம் என்ற நட்சத்திரம் உச்சமாகும் நாளில் நிறைவு பெறுகிறது. ஆயுதபூஜையாகவும் கொண்டாடுகின்றனர்.

நவராத்திரியின் எட்டாம் நாளை மகா அஷ்டமி அதாவது துர்க்காஷ்டமி என்றும், ஒன்பதாம் நாளை மகா நவமி என்றும் கொண்டாடுகிறோம்

ஒன்பது நாட்கள் மகிசாசுரனுடன் போரிட்ட தேவி, பத்தாம் நாள் அவனை அம்பெய்து வதம் செய்தாள். இந்நாளே விஜயதசமி – வெற்றியின் திரு நாள்.

குழந்தைகள் கல்வியினை கற்க அன்றுதான் ஆரம்பிப்பார்கள். அன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றி தரும் என்பது நம்பிக்கை.

நவராத்திரி முதல் தினம் தொடங்கி ஒன்பது நாட்கள் முழுவதும் காலையில் நீராடி சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை போன்ற பெண் தெய்வங்களுக்குப் பூச்சூடி, கற்பூரம், பழம் இதனுடன் நெய்வேத்தியம் வைத்து தெய்வங்களுக்குரிய மந்திரங்களைக் கூறி வணங்க வேண்டும்.

நாளும் ஒரு வண்ண மயம்

நவராத்திரியின் ஒன்பது நாட்களில் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு வண்ணம் முக்கியத்துவம் பெறும். முதல் நாள் முதல் ஒன்பதாம் நாள் வரை, அந்தந்த நாளுக்கான நிறத்தில் ஆடைகள் அணிந்து பெண்கள் பராசக்தியின் வெவ்வேறு அவதாரத்தை வழிபட்டு மகிழ்வர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT