40 ஆண்டுகளுக்கு பிறகு நாகையில் இருந்து காங்கேசந்துறைக்கு இன்று (14) முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொளி ஊடாக ஆயரம்பித்து வைத்துள்ளார்.
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படுவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி-இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதனைத்தொடர்ந்து நாகை துறைமுகத்தில் இருந்து கப்பல் போக்குவரத்துக்கான அனைத்து பணிகளும் தொடங்கி முடிவடைந்து விட்டது. கடந்த 8ஆம் திகதி நாகை-இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சோதனை ஓட்டமும் நடந்து முடிவடைந்து விட்டது.
150 பேர் பயணம் செய்யும் இந்த கப்பலில் நாகையில் இருந்து இலங்கைக்கு செல்வதற்காக 30 பேரும், இலங்கையில் இருந்து நாகைக்கு வருவதற்காக 26 பேரும் டிக்கெட் பதிவு செய்துள்ளதாக கூறப்பட்டது.
இந்நிலையில், கடந்த 10ஆம் திகதி தொடங்கவிருந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து திடீரென இரத்து செய்யப்பட்டு 12 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டது. இதன்பின்னர் நிர்வாக காரணத்துக்காக மீண்டும் 14ஆம் திகயான இன்று வரை பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. இவ்வாறு தொடர்ந்து 2 முறை கப்பல் போக்குவரத்து இரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று (14) காலை 7.00 மணி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து காணொலிக்காட்சி மூலம் புதுடில்லியில் இருந்தபடி பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது.
மத்திய துறைமுகங்கள், கப்பல், நீா்வழிப் போக்குவரத்து மற்றும் ஆயுஷ் துறை அமைச்சா் சா்பானந்த சோனாவால் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக சிறு துறைமுகங்கள் அமைச்சா் எ.வ வேலு, ரகுபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கரும் காணொலி காட்சியில் கலந்து கொண்டார்.150 பேர் பயணிக்கும் கப்பலில் முதல் நாள் பயணத்திற்காக 50 பேர் முன்பதிவு செய்துள்ளனர். பயணி ஒருவர் 50 கிலோ எடை கொண்ட பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது