தமிழகத்தில் ஒரு இலட்சம் ரூபா இலக்கிய விருதினைப்பெற்ற மாத்தளை பெ.வடிவேலனின் ‘வல்லமை தாராயோ’ என்ற சிறுகதைத் தொகுதியின் வெளியீட்டு விழா கொழும்புத் தமிழ்ச்சங்க விநோதன் மண்டபத்தில் பேராசிரியர் தை. தனராஜ் தலைமையில் எதிர்வரும் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
தினகரன் பிரதம ஆசிரியர் தே. செந்தில் வேலவர், வீரகேசரி பிரதம ஆசிரியர் எஸ். ஸ்ரீ கஜன், தமிழன் பிரதம ஆசிரியர் இரா.
சிவராஜா ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் பி.பி. தேவராஜ், வடமேல் மாகாண முன்னாள் ஆளுநர் கே.சி. லோகேஸ்வரன், பூபாலசிங்கம் புத்தகசாலை உரிமையாளர் பூபாலசிங்கம் ஸ்ரீதர்சிங் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
கல்வி அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் உடுவை எஸ். தில்லை நடராஜா, இந்து சமய கலாசார திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சண்முகலிங்கம், நிதி இராஜாங்க அமைச்சின் முன்னாள் செயலாளர் திருமதி சாந்திநாவுக்கரசன் ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக கலந்துகொள்வர்.
பிரமுகர்களின் மங்கல விளக்கேற்றல் மற்றும் செல்வி பிரியங்கா ஆன் பிரான்சிஸ் அவர்களின் தமிழ் வாழ்த்துடன் ஆரம்பமாகும் இந்நிகழ்வில் வரவேற்புரையை கே. பொன்னுத்துரை நிகழ்த்த தலைமையுரையைத் தொடந்து வாழ்த்துரைகளை அநிருத்தனன் (பணிப்பாளர், இந்து சமய கலாசார திணைக்களம்), வீ. விக்கிரமராஜா (முன்னாள் நிர்வாக செயலாளர் சுகாதார அமைச்சு), ‘சாகித்திய ரத்னா’ ஞானசேகரன் பிரதம ஆசிரியர் ஞானம் கலை இலக்கிய சஞ்சிகை ஆகியோர் நிகழ்த்துவர்.
வெளியீட்டுரையை பதிப்பாசிரியரும், ஆய்வாளருமான எச்.எச் விக்கிரமசிங்க நிகழ்த்தி நூலை வெளியிட்டு வைப்பார். முதற் பிரதியை இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக்கொள்வார்.
நூல் ஆய்வினை கிழக்குப் பல்கலைக்கழக கலாசார பீட தமிழ் கற்கைகள் துறைவிரிவுரையாளர் கலாநிதி த. மேகராசாவும் இலக்கியசெயற்பாட்டாளரும் கவிஞருமான மேமன் கவி ஆகியோரும் நிகழ்த்தவுள்ளனர்.
ஏற்புரையை நூலாசிரியர் கலாபூஷணம் பெ.
வடிவேலன் நிகழ்த்த, நிகழ்வுகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுதாபன பகுதிநேர அறிவிப்பாளர் ஆர்.பி. யசோதரை தொகுத்து வழங்குவார்.