Home » எந்த நிகழ்ச்சிகளானாலும் வடக்கில் தேசிய கீதம் தமிழில் பாடப்பட வேண்டும்

எந்த நிகழ்ச்சிகளானாலும் வடக்கில் தேசிய கீதம் தமிழில் பாடப்பட வேண்டும்

தனது வலுவான கருத்து இதுவென்கிறார் அமைச்சர் டக்ளஸ்

by gayan
October 12, 2023 6:10 am 0 comment

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் தமிழில் தேசிய கீதம் பாடப்படாதமை கவலையளிப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தேசிய தொழிற் தகைமை சான்றிதழ் (NVQ) கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு (10) யாழ். சாவகச்சேரி பொன்விழா மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்நிகழ்வில் தேசிய கீதம் தமிழில் பாடப்படாததை சுட்டிக்காட்டினார்.

இதுபற்றி அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், தமிழர் பண்பாடெனக் கூறி இங்கு சில நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. எனினும், இங்கு தேசிய கீதம் தமிழில் பாடப்படவில்லை. இது மனவருத்தத்துக்குரியது. நான் கலந்து கொள்கின்ற நிகழ்ச்சிகளிலும்,வட மாகாணத்தில் நான், தலைமைத்துவம் வகிக்கின்ற நிகழ்ச்சிகளிலும் பொதுவாக தேசிய கீதம் தமிழிலேயே பாடப்படுவதுண்டு. சிலவேளை ,வேறு அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்வில் என்னுடைய கையை மீறி சில நிகழ்வுகள் போயிருக்கலாம். அதை நான் கண்டித்ததுண்டு. இன்றைக்கும் ஒரு தவறை இங்கிருக்கும் அதிகாரிகள் செய்து விட்டனர்.

இங்கு நடக்கின்ற எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் தேசிய கீதம் தமிழில் பாடப்பட வேண்டுமென்பதுதான் என்னுடைய வலுவான கருத்து. அண்மையில் கூட ஜனாதிபதி மட்டக்களப்பிலும் இது தொடர்பான கருத்தை கூறி இருக்கின்றார். தேசிய விழாவில் கூட ஆரம்பத்தில் சிங்கள மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டு நிகழ்ச்சி முடிகின்ற நேரத்தில் தமிழில் பாடுவதற்கான ஏற்பாடு செய்திருக்கின்றார். ஜனாதிபதியை பொறுத்த வரையில் அல்லது அவருடைய அரசாங்கத்தை பொறுத்த ரையில் கொள்கையும் செயற்பாடும் ஒன்றுதான். சில வேளைகளில் சில அதிகாரிகள் இவ்வாறான தவறுகளை விடுகின்றனர். எனவே முக்கிய அதிகாரிகள் இவற்றை கருத்தில் எடுத்துக் கொள்வார்களென நம்புவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT