Thursday, March 28, 2024
Home » காசா மீதான தரைவழி தாக்குதலுக்கு 300,000 இஸ்ரேலிய படைகள் குவிப்பு

காசா மீதான தரைவழி தாக்குதலுக்கு 300,000 இஸ்ரேலிய படைகள் குவிப்பு

வான் தாக்குதல்களில் காசாவில் உயிரிழப்பு 1000ஐ தாண்டியது, இஸ்ரேலிலும் பலி 1200ஆக உயர்வு

by gayan
October 12, 2023 6:48 am 0 comment

காசா மீது இஸ்ரேல் தரைவழி தாக்குதல் ஒன்றுக்குத் தயாராகி வரும் நிலையில் நேற்று (11) ஐந்தாவது நாளாகவும் பலஸ்தீன பகுதி மீது சரமாரி வான் தாக்குதல்கள் இடம்பெற்றன.

இஸ்ரேலின் காசா எல்லையை ஒட்டி 300,000 துருப்புகள் குவிக்கப்பட்டிருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. “தமக்கு வழங்கும் பணியை நிறைவேற்ற தயாராக இருப்பதாக” அது குறிப்பிட்டுள்ளது.

எல்லையில் இருக்கும் இஸ்ரேலிய துருப்புகளிடம் கடந்த செவ்வாய்க்கிழமை பேசிய இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கல்லன்ட், “நாம் வான் வழியாக தாக்குதல்களை ஆரம்பித்தோம், பின்னர் நாம் தரையில் இருந்தும் வருவோம். நாங்கள் 2ஆம் நாளிலிருந்து அந்தப் பகுதியைக் கட்டுப்படுத்தி வருகிறோம், நாங்கள் தாக்குதலில் ஈடுபட்டுள்ளோம். அது தீவிரமடையும்” என்றார்.

ஏற்கனவே காசா மீது வான் தாக்குதல்களை நடத்தி பெரும் உயிர் மற்றும் உடைமை சேதங்களை ஏற்படுத்தி வரும் நிலையிலேயே தரைவழியாகவும் காசாவுக்குள் முன்னேற இஸ்ரேல் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

எனினும் ஹமாஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த குறுகலான, மக்கள் செறிந்து வாழும் நிலப் பகுதியில் கணிசமான இஸ்ரேலிய பணயக்கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில் இஸ்ரேல் தரைவழியாக முன்னேறுவது அவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

காசா மீதான தாக்குதல்கள் நேற்றும் அதே தீவிரத்தில் நடத்தப்பட்ட நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று (11) பின்னேரம் வரை காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 1055 ஆக அதிகரித்திருந்ததோடு மேலும் 5100 பேர் வரை காயமடைந்திருப்பதாக காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதில் 200க்கும் அதிகமான சிறுவர்கள் அடங்குகின்றனர். அதேபோன்று காயமடைந்த 60 வீதமானவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என்று காசா சுகாதார அமைச்சு தெரிவித்தது.

கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தொடக்கம் காசாவில் 200க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்தது. இதில் காசாவில் உள்ள இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியும் தாக்கப்பட்டதை இஸ்ரேல் இராணுவம் உறுதி செய்துள்ளது. மறுபுறம் இஸ்ரேலில் உயிரிழப்பு 1,200ஆக உயர்ந்திருப்பதாகவும், இதில் 155 படையினர் அடங்குவதாகவும் இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது.

காசாவில் அவலம் தொடர்கிறது

காசாவில் இஸ்ரேல் மின்சாரம், நீர் மற்றும் உணவு விநியோகத்தை துண்டித்து முழு முற்றுகையை செயற்படுத்தி வரும் நிலையில் காசாவில் மின்சாரத்தை பெறுவதற்கான ஒரே மூலமாக இருக்கும் சூரிய சக்தி ஆலையில் 12 மணி நேரத்தில் எரிபொருள் தீர்ந்து விடும் என்று பலஸ்தீன வலு அதிகாரசபை தலைவர் தபர் மெல்ஹம் நேற்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் காசா மக்கள் தொகையில் 10 வீதத்திற்கும் அதிகமாக இடம்பெயர்ந்துள்ள 200,000 க்கும் அதிகமான மக்களுக்கான தங்குமிட வசதிகளை வழங்க ஐ.நா முயன்று வருகிறது.

உணவுக்கு தட்டுப்பாடு நிலவும் நிலையில் சிறிய அளவான உணவை பெறும் எதிர்பார்ப்பில் பேக்கரிகளில் நீண்ட வரிசை காணப்படுகிறது. வங்கிகள் குறைந்த அளவான பணத்தையே விடுவிப்பதோடு எரிபொருள் நிலையங்களும் குறைந்த அளவே எரிபொருளை வழங்கி வருகின்றன.

இங்குள்ள மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ மையங்களில் 24 மணி நேரத்தில் மருந்துகள் தீர்ந்துவிடும் என்று சுகாதார அமைப்பு நேற்று எச்சரித்திருந்தது.

இந்நிலையில் காசாவில் உள்ள மக்களுக்கு பாதுகாப்பான பாதை ஒன்றை ஏற்படுத்துவது தொடர்பில் இஸ்ரேல் மற்றும் எகிப்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

என்றாலும் காசா மற்றும் எகிப்துக்கு இடையிலான ராபா எல்லை கடவை மீது இஸ்ரேல் வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்த எல்லைக் கடவையின் பலஸ்தீன பக்கமாக நான்கு ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதாக எகிப்திய உள்ளுர் மனித உரிமை அமைப்பொன்று தெரிவித்துள்ளது. இதில் இரண்டாவது தாக்குதல் எகிப்து மற்றும் பலஸ்தீன வாயில்களுக்கு இடையில் இடம்பெற்றிருப்பதோடு இதனால் பலஸ்தீன பக்கமுள்ள மண்டபம் சேதமடைந்துள்ளது.

காசாவில் உள்ள மக்கள் இஸ்ரேல் தவிர்த்து வெளியேற முடியுமான ஒரே எல்லைப் பகுதியாக இந்த ராபா எல்லைக்கடவை உள்ளமை குறிப்பிடத்தக்கது.

25 மைல் நீளமான காசா நிலப் பகுதி இஸ்ரேல், எகிப்து மற்றும் மத்தியதரைக் கடலால் சூழ்ந்துள்ளது. 2007 ஆம் ஆண்டில் இந்தப் பகுதியில் ஹமாஸ் ஆட்சியை கைப்பற்றியது தொடக்கம் இஸ்ரேல் தரை, கடல் மற்றும் வான் வழியாக முற்றுகையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

38 ஆண்டுகள் நீடித்த ஆக்கிரமிப்புக்குப் பின் இஸ்ரேலிய துருப்புகள் காசாவில் இருந்து 2005 ஆம் ஆண்டே வாபஸ் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

“எந்த இடமும் பாதுகாப்பாக இல்லை”

காசாவின் தெற்கு நகரான கான் யூனிஸ் மற்றும் மத்திய காசாவில் புரைஜ் அகதி முகாமில் இருக்கும் வீடுகள் மீது வான் தாக்குதல்கள் இடம்பெற்றதாக பலஸ்தீன ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதில் ஹமாஸ் ஆயுதப் பிரிவின் தலைவர் முஹமது தைப்பின் தந்தைக்கு சொந்தமான வீடும் தாக்கப்பட்டுள்ளது. இதன்போது தைப்பின் சகோதரர் மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பல கட்டடங்கள் தகர்க்கப்பட்ட நிலையில் சுமார் 50 பேர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதோடு அவர்களை காப்பற்றும்படி மீட்புக் குழுவினருக்கு அங்குள்ள குடியிருப்பாளர்கள் சமூக ஊடகத்தில் அழைப்பு விடுத்துள்ளனர்.

“அவர்கள் எல்லா இடத்தையும் தாக்குவதால், காசாவில் எந்த இடமும் பாதுகாப்பாக இல்லை” என்று தற்காலிக முகாம் ஒன்றில் தனது குடும்பத்துடன் தஞ்சமடைந்திருக்கும் 35 வயதான அலா அபூ டயிர் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை தொடக்கம் இஸ்ரேல் நடத்தி வரும் வான் தாக்குதல்களில் 22,600 குடியிருப்புகள், 10 சுகாதார வசதிகள் மற்றும் 48 பாடசாலைகள் அழிக்கப்பட்டிருப்பதாக பலஸ்தீன வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

“அப்பட்டமான மனிதாபிமானமற்ற தன்மை மற்றும் மக்களை அடிபணிய வைக்கும் வகையில் குண்டு வீசுவது, பட்டினியை பயன்படுத்துவது போன்ற போர் நடவடிக்கை மற்றும் அவர்களின் தேசிய இருப்பை ஒழிப்பது என்பது இனப் படுகொலைக்குக் குறைவானதல்ல” என்று ஐ.நாவுக்கான பலஸ்தீன தூதுவர் ரியாத் மன்சூர் ஐ.நா பாதுகாப்புச் சபைக்கு செவ்வாக்கிழமை எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்த வன்முறை ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெரூசலத்திற்கும் பரவியுள்ளது. அங்கு இஸ்ரேலிய படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றச்சாட்டில் மேலும் இரு பலஸ்தீனர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை தொடக்கம் இஸ்ரேலிய இராணுவத்துடன் மோதலில் ஈடுபட்ட 21 பலஸ்தீனர்கள் மேற்குக் கரையில் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கு அமெரிக்க வெடிபொருள்

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு மத்தியில் அமெரிக்காவின் வெடிபொருட்களை ஏற்றிய முதல் விமானம் நேற்று இஸ்ரேலை அடைந்துள்ளது. ஹமாஸுடனான போருக்கு வான் பாதுகாப்பு, மற்றும் ஏனைய பாதுகாப்பு உதவிகளை இஸ்ரேலுக்கு வழங்குவதாக அமெரிக்கா அறிவித்திருந்த நிலையிலேயே இந்த வெடிபொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இந்த வெடிபொருட்கள் தவிர, பலஸ்தீன ரொக்கெட் குண்டுகளை இடைமறித்து வரும் இஸ்ரேலிய ‘அயன் டோம்’ வான் பாதுகாப்பு அமைப்புக்கு அதிக இடைமறிப்பு ஆயுதங்களையும் அமெரிக்கா வழங்குவதாக நம்பப்படுகிறது. காசாவில் இருந்து இஸ்ரேலின் பல இலக்குகள் மீது சரமாரியாக வீசப்பட்டு வரும் ரொக்கெட் குண்டுகளில் இருந்து இந்த அயன் டோம் அமைப்பே பாதுகாப்பு வழங்கி வருகிறது.

இஸ்ரேல் நீண்ட காலமாக அமெரிக்காவின் இராணுவம் மற்றும் நிதி உதவிகளை பெற்று வருகிறது. 2016 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையில் இஸ்ரேலுக்கு 10 ஆண்டுகளுக்கு 38 பில்லியன் டொலர் இராணுவ உதவியை வழங்க அமெரிக்க ஒப்புக்கொண்டது. அமெரிக்கா ஒரு நாட்டுக்கு வழங்கிய அதிக இராணுவ உதவியாக இது உள்ளது.

இந்நிலையில் இஸ்ரேலில் சிறுபான்மை அேரபியர் மற்றும் பெரும்பான்மை யூதர்களுக்கு இடையில் மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில் துப்பாக்கி உரிமம் பெற்ற பொதுமக்களுக்கு கைத்துப்பாக்கிகளை வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இராணுவ உதவிகள் செல்வதற்கு சில மணி நேரத்திற்கு முன்னர், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேலுக்கான தனது ஆதரவை மீண்டும் ஒரு முறை உறுதி செய்ததோடு, கடந்த சனிக்கிழமை ஹமாஸ் நடத்திய தாக்குதலை “ஒரு தீய செயல்” என்று வர்ணித்தார்.

இந்த நிலையை சாதகமாக பயன்படுத்த எதிர்பார்ப்பவர்கள் விலகி இருக்கும்படி எச்சரித்த பைடன், பிராந்தியத்தில் அமெரிக்காவின் இராணுவ நிலைகள் பலப்படுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

இந்நிலையில் பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக அரபுலகம் எங்கும் வரும் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டங்களை நடத்தும்படி ஹமாஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் காலித் மஷால் அழைப்பு விடுத்துள்ளார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவு செய்யப்பட்ட அறிக்கை ஒன்றிலேயே இந்த அழைப்பை விடுத்துள்ளார். “அக்சா வெள்ளத்தின் வெள்ளிக்கிழமையாக வரும் வெள்ளிக்கிழமை அரபு மற்றும் முஸ்லிம் உலகின் சதுக்கங்கள் மற்றும் வீதிகளுக்கு செல்லுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். காலித் மஷால் தற்போது ஹமாஸின் புலம்பெயர் அலுவலகத்தின் தலைவராக உள்ளார்.

இஸ்ரேலின் வடக்கிலும் பதற்றம்

இஸ்ரேலின் லெபனானுடனான வடக்கு எல்லையில் மூன்றாவது நாளாக நேற்றைய தினத்திலும் ஷெல் தாக்குதல்கள் இடம்பெற்றன. மறுபுறம் சிரியாவில் இருந்தும் இஸ்ரேலை நோக்கி ஷெல் குண்டுகள் வீசப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

இந்த குண்டுகள் திறந்த வெளியில் விழுந்ததாகவும் பதில் நடவடிக்கையாக பீரங்கி மற்றும் மோட்டார் குண்டுகளை வீசியதாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் லெபனானுக்குள் ஹிஸ்புல்லாவின் கண்காணிப்புத் தளம் ஒன்றின் மீது இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியுள்ளது. ஹிஸ்புல்லா நடத்திய புதிய ரொக்கெட் தாக்குதலுக்கு பதில் கொடுக்கும் வகையில் இந்தத் தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT