நபர் ஒருவரை 31 வருடங்களுக்கு முன்பொல்லுகளால் தாக்கி கொலை செய்த மூவருக்கு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன நேற்று (10) இந்த தீர்ப்பை வழங்கினார். இதில், குற்றவாளிகளாகக் காணப்பட்ட மூவருக்கு மரண தண்டனையும் மற்றுமொரு குற்றவாளிக்கு 10 வருட கடுங்காவல் சிறைத் தண்டனையும் விதித்து களுத்துறை மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன நேற்று (10) தீர்ப்பளித்தார்.
1992 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாட்களில் நவுத்துடுவ கீரந்திடிய பிரதேசத்தில் மேகமவத்த கொலணி, 5ஆம் கட்டை பிரதேசத்தில் வசித்து வந்த தனபால பெர்னாண்டோ என்பவரை கம்புகளாலும் தடிகளாலும் இவர்கள் அடித்துக் கொலைசெய்ததாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில், 03, 04 மற்றும் 05 ஆவது பிரதிவாதிகளான வலகெதர, பல்லேகொடவைச் சேர்ந்த மல்முத்துகே தயாரத்ன என்ற ஒலிவர், நாவுத்துடுவ, கீரந்திடிய பகுதியைச் சேர்ந்த அனகிபுர ஆரியரத்ன என்ற லொக்கா மற்றும் 05 ஆவது நபரான கிரிமெட்டிய பகுதியைச்சேர்ந்த பிரேமதிலக்க அல்லது தர்மதிலக்க என்ற மூவருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டது. 01ஆம் பிரதிவாதியான பேருவளை, கலவில பகுதியைச் சேர்ந்த ரத்னா என்ற அனகிபுர பிரேமதிலக என்பவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனையும் மூன்று இலட்சம் ரூபா நட்ட ஈடும், மேற்படி நட்டஈட்டை செலுத்தத் தவறினால் மேலும் இரண்டு வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில்இரண்டாவது குற்றவாளி புற்றுநோயால் மரணமடைந்துள்ளதாக நீதிமன்றத்தில்தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பினருக்குமிடையில் ஏற்பட்ட கலவரத்தின் பின்னர், நாவுத்துடுவ கீரந்திடிய பிரதேசத்தில் கம்புகளால் அடித்து நபர் ஒருவரைக் கொலைசெய்த சம்பவம் தொடர்பில் வெலிப்பன்ன பொலிஸாரால் சந்தேகநபர்கள் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
(பொதுப்பிட்டிய நிருபர்)