நாகை- இலங்கை கப்பல் போக்குவரத்து இன்று தொடங்கவிருந்த நிலையில், 12 ஆம் திகதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று (10) தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக நாகை – இலங்கை இடையே நேற்று முன்தினம் (08) பயணிகள் கப்பல் சோதனை ஓட்டம் நடந்தது. கேப்டன் பிஜு ஜார்ஜ் தலைமையில் 14 ஊழியர்கள் இந்த சோதனை ஓட்டத்தை நடத்தினர்.
இன்று முதல் பயணிகளுடன் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று (09) நிர்வாக காரணங்களால் இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து திடீரென ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாகவும், வியாழக்கிழமை (12) காலை 7.00 மணிக்கு இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என்றும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.