நாட்டில் நிலவும் கடும் மழை, காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலையால், மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 25 பேர் காயங்களுக்குள்ளாகியுள்ளனர். இதில், 13 மாவட்டங்களில் 75,734 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் வீட்டின் மேல் பாரிய கல் ஒன்று புரண்டு விழுந்ததில், காலி பிரதேசத்தில் அமரசேன விஜேசிங்க என்ற 78 வயது நபர் மரணமடைந்துள்ளார்.
அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் அட்டாளைச்சேனை பகுதியில் மின்னல் தாக்கி நபர் ஒருவரும் கடும் மழையின் போது முச்சக்கர வண்டி குடைசாய்ந்ததில் ஒருவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, மாத்தறை மாவட்டத்திலேயே அதிகளவு மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும்,இம்மாவட்டத்தில்
10 பிரதேச செயலாளர் பிரிவுகளில் வாழும் மக்கள் பெரும் பாதிப்புகளை எதிர் கொண்டுள்ளதாகவும் அந்நிலையம் தெரிவித்துள்ளது. அப்பகுதிகளில் 22 ஆயிரத்து பன்னிரண்டு குடும்பங்களை சேர்ந்த 55,775 பேர் தனது சொந்த இடங்களிலிலிருந்து இடம்பெயர்ந்துள்ளதாக மாத்தறை மாவட்டச் செயலாளர் வை. விக்ரமசிறி அறிவித்துள்ளதாகவும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது. இதற்கு மேலதிகமாக 11 ஆயிரத்து 692 குடும்பங்களைச் சேர்ந்த 41,726 பேர் வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
(லோரன்ஸ் செல்வநாயகம்)