மாத்தறை பிரதேசத்தின் ப்ரீத்தி பிரவுன்சில் பகுதியிலுள்ள வீடொன்றில் பணிபுரிந்து வந்த 67 மற்றும் 70 வயதான பெண்களை கொலை செய்த சிலர், அங்கிருந்த பொருட்களை கொள்ளையிட்டுள்ளதாக, மாத்தறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெளியே சென்றிருந்து வீட்டுரிமையாளர், வீட்டுக்கு வந்தபோது, வேலையாட்களை காணாது திகைத்துள்ளார். அயலவர்களுடன் இணைந்து தேடிய வேளையில், அவ்விருவரும் கொலை செய்யப்பட்ட நிலையில், கழிவறைக்குள் சடலமாக கிடந்துள்ளனர்.இதையடுத்து, இச்சம்பவம் பற்றி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. வீட்டின் அலுமாரி உடைக்கப்பட்டு தங்கம் அல்லாத 12 வளையல்கள்,2 மாலைகள், தங்க கரண்டி மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் என்பன களவாடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.இந்நிலையில், சம்பவம் தொடர்பாக விசாரணையை ஆரம்பித்த மாத்தறை பொலிஸார் 25 வயதான சந்தேக நபர் ஒருவரை கைது செய்து திருடப்பட்ட பொருட்களையும் அவரிடமிருந்து மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
335