இஸ்ரேலிலுள்ள இலங்கை ஊழியர்களின் பாதுகாப்புத் தொடர்பிலான விடயங்களை கண்டறிய, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதற்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதுபற்றித் தெரிவித்த அமைச்சர்: இலங்கை தொழிலாளர்களை பாதுகாப்பதற்காக இஸ்ரேலின் தற்போதைய நிலைமை தொடர்பில் அவதானிக்கப்பட்டு வருகின்றது. இதனடிப்படையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் தயாராக உள்ளது. ஹமாஸ்-இஸ்ரேல் மோதல்களால் இஸ்ரேலிலுள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள 2 தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இம்மோதல்களால், இலங்கையர் ஒருவர் லேசான காயத்திற்கு உள்ளானார். இவர் தொடர்பிலான தகவல்களை தொடர்ந்து திரட்டிவருகிறோம். சுமார் 8,000 இலங்கையர்கள் இஸ்ரேலில் பணிபுரிகின்றனர்.90 வீதமானோர் பராமரிப்பு சேவை தொழிற்றுறையில் ஈடுபட்டுள்ளனர். அங்குள்ள இலங்கையர்கள் குறித்த தகவல்களை அறிந்துகொள்வதற்காக இரண்டு தொலை பேசி இலக்கங்கள் அறிமுக்கப்பட்டுள்ளன.
0094716640560 என்ற வட்ஸ்அப் இலக்கத்தினூடாக அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 1989 என்ற உடனடி(Hot Line) தொலைபேசி இலக்கத்தினூடாகாவோ தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.