Thursday, March 28, 2024
Home » தென்னாபிரிக்காவுக்கு எதிராக இன்று முதல் போட்டியில் இலங்கை

தென்னாபிரிக்காவுக்கு எதிராக இன்று முதல் போட்டியில் இலங்கை

by Rizwan Segu Mohideen
October 7, 2023 9:54 am 0 comment

உலகக் கிண்ணத்தை ஆரம்பித்து இலங்கை அணி இன்று (07) தென்னாபிரிக்காவுக்கு எதிராக பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

டெல்லி, அருன் ஜெய்ட்லி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி பகலிரவு ஆட்டமாக பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை அணி தனது முன்னணி பந்துவீச்சாளர்களான வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மன்த சமீர ஆகியோர் இன்றியே உலகக் கிண்ணத்தில் களமிறங்கியுள்ளது. அண்மையில் நடந்த ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் மோசமாக தோற்ற இலங்கை உலகக் கிண்ண பயிற்சிப் போட்டிகளிலும் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானிடம் தோல்வியை சந்தித்த நிலையிலேயே இன்று களமிறங்கவுள்ளது.

எனினும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் குசல் மெண்டிஸ் அதிரடி சதத்தை பெற்ற உத்வேகத்துடன் இருப்பதோடு ஆரம்ப வீரர் குசல் ஜனித் பெரேரா மற்றும் சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன தமது காயங்களில் இருந்து மீண்டு இன்றைய போட்டியில் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

மறுபுறம் தென்னாபிரிக்க அணிக்கும் உலகக் கிண்ண பயிற்சிப் போட்டிகள் சாதகமாக அமையவில்லை. ஆப்கானுக்கு எதிரான முதல் பயிற்சிப் போட்டி மழையால் கைவிடப்பட்டதோடு நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது பயிற்சிப் போட்டி தோல்வியை சந்தித்தது.

டெம்பா பவுமா தலைமையிலான தென்னாபிரிக்கா தனது வலுவான அணி ஒன்றுடனேயே இன்றைய போட்டியில் களமிறங்கும் என்று எதிர்பார்க்கலாம். ஆரம்ப துடுப்பாட்ட வரிசை குயின்டன் டி கொக் மற்றும் ரஸி வன்டர் டுசனில் பெரிதும் தங்கி இருக்கும் என்பதோடு ககிசோ ரபாடா மற்றும் டப்ரைன் ஷம்சி பந்துவீச்சில் பலம் சேர்க்கின்றனர்.

டெல்லி ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானதாகும். மந்தமான இந்த ஆடுகளத்தில் இரண்டாவது துடுப்பெடுத்தாடும் அணிக்கு அதிக சாதகமாக அமைய வாய்ப்பு இருக்கிறது.

எனவே போட்டியின் நாணய சுழற்சி முக்கியமானதாக அமையவுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT