நாகப்பட்டினத்திலிருந்து இலங்கைக்கு செல்வதற்கான பயணிகள் கப்பல் நேற்று வியாழக்கிழமை நாகை துறைமுகத்தை வந்தடைந்தது.
பரீட்சார்த்தமாக இன்று வெள்ளிக்கிழமை நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படுகிறது.
இதற்காக கடந்த மாதம் அமைச்சர் எ.வ.வேலு, நாகை துறைமுகத்தை ஆழப்படுத்தி தூர்வாரும் பணியை தொடக்கி வைத்தார்.
நாகப்பட்டினம் துறைமுகத்தை நவீனப்படுத்த மத்திய அரசு வழங்கிய 03 கோடி ரூபா நிதியில், நாகப்பட்டினம் துறைமுகத்தை ஆழப்படுத்தி நவீனப்படுத்தும் முயற்சியில் தமிழ்நாடு அரசு இறங்கியது. இதை தொடர்ந்து நாகப்பட்டினம் துறைமுகத்தில் குடியுரிமை பெறுவது, மருத்துவ பரிசோதனை செய்வது, பயணிகள் கொண்டு வரும் உடமைகளை பாதுகாப்பாக வைப்பது மற்றும் ஆய்வு செய்வதெற்கென தனித்தனியாக அறைகள் கட்டப்பட்டுள்ளன. பயணிகள் கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டதும் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து 02 கப்பல்கள் இலங்கைக்கு சென்று வரும். இதில் ஒரு கப்பல், நாகப்பட்டினத்திலிருந்து காலை 10 மணிக்கு காங்கேசன் துறைமுகம் நோக்கி செல்லும். எதிர்த் திசையில் இலங்கையிலிருந்து மாலை 05 மணிக்கு நாகப்பட்டினம் நோக்கி கப்பல் புறப்படும்.
திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது