அவுஸ்திரேலியா அனுப்புவதாக கூறி போலி விசாவை வழங்கி 90 இலட்சத்து 65 ஆயிரம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டு மாவட்ட விசேட குற்றப் புலன்விசாரணை பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இவர் திருகோணமலை பிரதேசத்தைச் சேர்ந்த போலி வெளிநாட்டு முகவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரை எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான்
நீதிமன்ற நீதவான் (02) உத்தரவிட்டுள்ளார்.
திருகோணமலை ஓசில் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞன், மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனை பிரதேசத்தை சேர்ந்த ஒருவரை, வேலை வாய்ப்பு விசா மூலம் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்புவதாக போலி விசாவை வழங்கி அவரிடமிருந்து 90 இலட்சத்து 65 ஆயிரம் ரூபாவை மோசடியாக பெற்றுள்ளார்
அந்த விசாவில் இலங்கையிலிருந்து பயணிக்க முடியாதெனக் கூறி, இந்தியாவுக்கு சென்று அங்கிருந்து அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்வ தாக அந்த நபரை இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்தியா சென்ற நபர் அங்கிருந்து அவுஸ்ரேலியாவுக்கு விமான மூலம் செல்வதற்காக முயற்சித்த போது, அந்த விசா போலியானதென தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் அங்கிருந்து இலங்கைக்கு திரும்பியுள்ளார்.
இது குறித்து, பாதிக்கப்பட்டவர் மட்டக்களப்பு மாவட்ட விசேட குற்றப் புலன்விசாரணை பிரிவு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.இதையடுத்து,குறித்த போலி முகவர் திருகோணமலையில் வைத்து (01) கைதானார்.